எத்தனையோ கிராமங்கள் கிடக்க.. பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டத்தில் மட்டும் முதல்வர் பங்கேற்பது ஏன்?
சென்னை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதால் அந்த கிராமம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கூட்டங்களை நடத்த வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்தான்.
மாநகரங்கள், நகரங்கள் மட்டுமே வளர்வது அந்த நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்காது. கிராமங்களும் வளர்ந்தால்தான் ஒரு நாடானது தன்னிறைவை அடைந்ததாக அர்த்தமாகிறது.

கமல்ஹாசன்
இதனால்தான் கிராம சபை கூட்டங்களை கமல்ஹாசன் கையில் எடுத்தார். மேலும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே இல்லாமல் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதன் பிறகுதான் இந்த கிராம சபை கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டது.

திமுகவின் தேர்தல் பிரச்சாரம்
பின்னர் திமுகவும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் இதை கையில் எடுத்தது. இதையே திமுகவின் தேர்தல் பிரச்சாரமாகவும் இருந்தது. இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

கவனத்தையும் ஈர்த்துள்ளது
இதனால் இந்த கிராமம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எத்தனையோ கிராமங்கள் இருக்க முதல்வர் ஸ்டாலின் எதற்காக பாப்பாப்பட்டி கிராமத்தை தேர்வு செய்தார் என்ற கேள்விக்கு பின்னர் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. அது என்னவென பார்ப்போம். பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலே நடத்தப்படாமல் இருந்த மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டாக்கச்சியேந்தல் போன்ற ஊராட்சிகளில் 2006 ஆம் ஆண்டு ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டார் கருணாநிதி.

ஊராட்சி மன்றத் தலைவர்
இந்த ஊராட்சிகளில் பட்டியலினத்தவர்கள்தான் ஊராட்சி மன்றத் தலைவராக வேண்டும் என்ற காரணத்திற்காகவே சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டை நீட்டித்து முதல் முறையாக உத்தரவு பிறப்பித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தியவர் கருணாநிதி. அதன்படி தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது உள்ளாட்சி மன்றங்களில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.

சென்னையில் முதல்வர் தலைமையில்
மேலும் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் முதல்வர் தலைமையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்பு 2006 ஆம் ஆண்டு பெருவிழா நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து தலா ரூ 20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்து அந்த நிதியும் வழங்கப்பட்டது. இதனால்தான் பாப்பாப்பட்டியில் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications