தேங்காய் சிதறிடுச்சு.. பாஜகவுக்கு அந்த நடிகை மட்டும் ஸ்பெஷலா? அப்ப முர்மு? கேட்டது யார் பாருங்க
சென்னை: ராமர் கோவிலுக்கு நடிகை கங்கனாவிற்கு அழைப்பு விடுத்தவர்கள், முர்முவுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறை சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார்.

அதாவது, ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக கூறி இவ்வாறு விமர்சித்திருந்தார் பிரதமர் மோடி.
இதுபோலவே, தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருப்பதாக கூறி தமிழக தலைவர்கள் கண்டனங்களை ஒவ்வொருவராக பதிவு செய்து வருகிறார்கள். பிரதமரின் இந்த அவதூறான பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
திருடர்கள்: "தமிழர்களை திருடர்கள் என்று மோடி விமர்சிப்பதா? ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது? என்று சீறியிருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
இன்னும் ஒரு வாரத்தில், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கெடு விதித்திருக்கிறது.
இந்த லிஸ்ட்டில், திமுக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இணைந்துள்ளார்... தனியார் டிவி சேனலுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
கவனமான வார்த்தை: அந்த பேட்டியில், "கடந்த கால பிரதமர்கள் தங்களது வார்த்தைகளில் கவனமாக இருந்தார்கள்... ஆனால் பிரதமரே நாட்டு மக்களை பிரித்து பேசுவது தவறான செயலாகும்.. இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று பிரதமர் மோடி சொல்வதை ஏற்க முடியாது. மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவுமே கிடையாது.. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் கலந்திருக்கிறது.. தமிழர்களின் மாண்பை கொச்சைப்படுத்துகிறார் பிரதமர் மோடி.
அப்பட்டமான பழியை தமிழர்கள் மீது சொல்வதை எப்படி ஏற்க முடியும்? இந்துக்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காகவே பிரதமர் இப்படி பேசுகிறார்.. பி.கே.பாண்டியனின் பணியை ஒடிசா மக்கள் பாராட்டுகிறார்களே? ஒடிசாவில் பாஜக நுழைய முடியவில்லை என்பதால்தான், இப்படியெல்லாம் பேசுகிறாரகள்..
குடியரசு தலைவர்: குடியரசு தலைவரை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்காதது ஏன்? ராமர் கோவிலுக்கு கங்கனாவிற்கு அழைப்பு, முர்முவுக்கு மறுப்பு ஏன்? பிரிவினை அரசியலை பேசுகிறார் பிரதமர் மோடி. இடத்திற்கு ஏற்றப்படி சந்தர்ப்பவாதமாக பேசுகிறார் பிரதமர்" என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.












Click it and Unblock the Notifications