தொண்டர் மீது கல்லை வீசிய சா.மு.நாசருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் எப்படி? பின்னணி என்ன?
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு.நாசருக்கு மீண்டும் ஏன் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அறிவாலய வட்டாரங்கள் ஒரு காரணத்தை கூறி வருகிறார்கள்.
தமிழக அமைச்சரவையில் இன்றைய தினம் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது கே.ராமசந்திரன், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக 4 பேர் இன்று புதிதாக பொறுப்பேற்கிறார்கிறார்கள். அது போல் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில் பால்வளத் துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் தட்டுப்பாடு, பால் விநியோகத்தில் தாமதம், பாலின் தரத்தில் மாற்றம் உள்ளிட்ட புகார்களும் சர்ச்சைகளும் நீண்டிருந்தன. இந்த நிலையில்தான் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜுக்கு முன்பு பால் வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாசர், தொண்டர் ஒருவர் மீது கல் வீசிய வீடியோ வைரலான நிலையில்தான் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் அவருக்கு ஏன் மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாசருக்கு சிறுபான்மை நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது கருணாநிதி காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வரும் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டது. அவர் சிறுபான்மைத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கட்சி, அரசு பதவிகளில் அவருடைய குடும்பத்தினர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுக்க பல பதவிகள் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது.
அது போல் திண்டிவனம் நகராட்சியில் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வானின் தலையீட்டை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் செஞ்சி மஸ்தானின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும் செஞ்சி மஸ்தான் மீது ஏராளமாக புகார்கள் வந்த நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய சமூகத்தினர் யாரும் அமைச்சரவையில் இல்லை என்ற விமர்சனம் எழும் என்பதால்தான் நாசரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கலாம் என்ற முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுத்திருந்தார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications