எந்த தவறும் செய்யாமல் பழிக்கு மட்டும் பாஜக ஏன் ஆளாக வேண்டும்? கஸ்தூரி கேள்வி
சென்னை: எந்த தவறும் செய்யாமல் பாஜக பழிக்கு மட்டும் ஏன் ஆளாக வேண்டும் ? ஆனால் இப்பொழுது அதுதான் நிலமை.. ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டின் அடுத்த அரசு அமைவதில் தான் குறுக்கே நிற்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகையால், பாஜகவை மட்டுமே மக்கள் சந்தேகிப்பார்கள். எனவே, எந்தவித இடையூறும் இன்றி புதிய அரசு அமைவதை விரைவுபடுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் சொந்த நலனுக்கே உகந்தது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால், ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவருக்கு விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவு தந்தால் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உள்ளது. அவர்களின் ஆதரவு கடிதத்துடன் சென்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உள்ளது. ஏனெனில் தனிப்பெரும் கட்சியாக தவெக இருந்தாலும், கூட்டணி ஆட்சி என்று தவெக பட்டியலுடன் காங்கிரஸ் பட்டியலையும் இணைத்துள்ளார் விஜய்.

அப்படி என்றால் மீதமுள்ள எம்எல்ஏக்கள் யார் என்று கேள்வி எழுப்பிய ஆளுநர், அவர்களின் ஆதரவையும் காட்டினால் தான் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் பிரிந்து செல்வதை தடுக்க அவர்கள் புதுச்சேரி ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தவெக யோசித்து வருகிறது. இடதுசாரிகள், விசிக எடுக்கும் முடிவு என்ன என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
இந்த சூழலில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "எந்த தவறும் செய்யாமல் பாஜக பழிக்கு மட்டும் ஏன் ஆளாக வேண்டும் ? ஆனால் இப்பொழுது அதுதான் நிலைமை. தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது ஆளுநரின் கடமையாகும்.
இதை தாமதப்படுத்தும் எந்த செயல்பாடும் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமன்றி மற்றவர்களாலும் ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும். அதற்கு பாரதிய ஜனதா கட்சியே முழு காரணம் என்று சந்தேகம் வரும். விஜய்யின் பாதையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தடையும், அரசியலமைப்பு ரீதியிலான தாமதமாகக் கருதப்படாது; அது பாரதிய ஜனதா கட்சி யின் மறைமுக அரசியலாகவே பார்க்கப்படும்-உண்மையில் அப்படி இல்லையென்றாலும் கூட.
ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டின் அடுத்த அரசு அமைவதில் தான் குறுக்கே நிற்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். So, பாஜகவை மட்டுமே மக்கள் சந்தேகிப்பார்கள். எனவே, எந்தவித இடையூறும் இன்றி புதிய அரசு அமைவதை விரைவுபடுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் சொந்த நலனுக்கே உகந்ததாகும்." இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தமிழகத்தில் த வெ க ஆட்சியமைப்பதை தடுக்க முயற்சிக்கிறது பாஜக என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர், சட்டப்படி தன் கடமையை நிறைவேற்ற வேண்டும். நேற்று வரை த வெ கவை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், விஜய் அவர்களை பாஜக வால் உருவானவர், பாஜக வின் 'B' டீம் என்றெல்லாம் விமர்சித்த திருமாவளவன் அவர்கள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆட்சி அமைய வேண்டும். குதிரைப் பேரங்கள் தவிர்க்கப்பட வேண்டும், சந்தர்ப்பவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications