பாம்புகள் ஏன் ஆபத்தான விலங்குகள் தெரியுமா? இருட்டில் சுருண்டு படுத்திருக்கும் எமன்!
சென்னை: பாம்புகள் ஏன் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன? என கேள்வி எழுப்பப்பட்டது. பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எகிப்திய ராணி கிளியோபாட்ராவின் கோட்டை எதிரிகளால் முற்றுகை இடப்பட்டபோது இனி தப்பிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. எதிரிகளிடம் பிடிபட்டால், சித்ரவதைதான் முடிவு. எனவே இம்மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக தான் வளர்த்த ஒரு எகிப்திய (Snoted Cobra) நல்லப் பாம்பை எடுத்து தனது மார்பில் தீண்டச்செய்து சற்று நேரத்தில் தனது உயிரை போக்கிக் கொண்டார்.

கோட்டையை தகர்த்து அந்தப்புரம் நுழைந்த எதிரிகள் உயிரற்ற அரசியைத்தான் கண்டனர். இது சரித்திர நிகழ்வு. ஒரு விஷப்பாம்பின் தீண்டல் என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிருகங்கள் காட்டில்தான் அதிகமாக உள்ளன. ஆனால், விஷப்பாம்புகள் நம்மை சுற்றியே நம்முடன் வாழ்கின்றன.
எலி, நாய், பூனை மற்றும் இதர விலங்குகளின் கடிக்கு நாம் குணம் பெற நமக்கு சில ஊசிகள் போடப்பட்டால் போதும். ஆனால் ஒரு நல்லப் பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ரம்பச் செதிள் விரியன் போன்ற இதர விஷப்பாம்புகளின் தீண்டலுக்கு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்து மிகுந்த செலவில் தொடர் சிகிச்சை பெற வேண்டும். (அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.)
பலர் நினைப்பது போல் நஞ்சுள்ள பாம்பு தீண்டிய ஒருவருக்கு மருத்துவமனையில் எதிர் வினை நஞ்சு மட்டுமே செலுத்தப்படுவதில்லை!.
இதனை செலுத்தும் போது உடலுக்கு பல்வேறு விதமான ஒவ்வாமை ஏற்படலாம். எதிர்வினை மருந்து இன்னொரு பிராணியின் இரத்த பிளாஸ்மாவிலிருந்து தயாரிக்கப்படுவதால் இது கண்கள் சிவந்து போதல், இதயத்துடிப்பு மிகவும் அதிகரித்தல், உடலில் தடிப்புகள் ஏற்படுதல் மற்றும் பல விதமான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். இதனை உடனுக்குடன் இனம் கண்டு அதற்கேற்ப பல நாட்கள் அதற்கும் சேர்த்து தொடர் சிகிச்சை அளிப்பார்கள்.
நகரில் உள்ள மருத்துவமனைகளில் எல்லா மருத்துவர்களும் பாம்பு தீண்டலுக்கான சிகிச்சை அளிப்பதில்லை. அரசு மருத்துவமனைகள் மற்றும் அப்பல்லோ போன்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் ஆகியன இந்த சிகிச்சை அளிக்கின்றனர்! தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக ஏறத்தாழ 15 - 25 தினங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு மிக அதிகமாக செலவாகும்!
மற்ற ஆபத்தான மிருகங்களை இலகுவாக நம்மால் பார்க்க முடியும். ஆனால், பாம்புகள் இரவு நேரங்களில் நம் வீட்டின் அருகிலேயே, நமது காலருகில் கூட எந்த இடத்திலும் இருக்கலாம்.!
எனது புகைப்படத்தில் உள்ளது போன்று வட்டமாக ஒரு கண்ணாடி விரியன் பாம்பு குறைவான வெளிச்சமுள்ள பாதையில் சுருண்டு படுத்திருந்தால் அதனைப் பார்த்து உடனேயே விலகுவதென்பது எல்லோருக்கும் இயலாது! பாம்பிலிருந்து மூன்றடி தூரத்தில் நாம் காலடி வைத்தாலும் அது பாய்ந்தெழுந்து நம்மைத் தீண்டுவது நிச்சயம்! எனவேதான், பாம்புகள் மிகவும் ஆபத்தானவைகளாக கருதப்படுகின்றன! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications