எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. அவரிடம் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன தனித்துவம்?
சென்னை: தமிழ் திரை உலகம் எத்தனையோ பின்னணி பாடகர்களை கண்டுள்ளது. ஆனால் எஸ்பி பாலசுப்பிரமணியம் மட்டும் அதில் தனித்து தெரிகிறார். அவரது இந்த தனித்துவம்தான் இத்தனை ஆயிரம் பாடல்களை பாட வைத்து மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடிக்க வைத்தது.
கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு அவர் திரையுலகம் வந்தவர் இல்லை. ஆனால் சங்கராபரணம் திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலை சிறப்பாக பாடி தேசிய விருது பெற்றவர் என்றால் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
1980கள் முதல் 2000த்தின் பிற்பகுதி வரை எஸ்பிபி தமிழ்த் திரையில் கோலோச்சி இருந்தார். இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான பாடகர் என்றால் சிறு குழந்தைக்குக் கூட தெரியும் அது எஸ் பி பாலசுப்பிரமணியம் தான் என்று.
இளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு!
இசைஞானியின் ஆத்ம நண்பன்
இசைஞானிக்கு முதல் சாய்ஸ் எஸ்பிபி என்றால் அவரது திறமைக்கு வேறு நற்சான்றிதழ் தேவைப்படாதே. அந்தக் காலக்கட்டங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஏசுதாஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல தமிழ் சினிமாவுக்கு வாய்த்தார்கள். இருவருமே லெஜண்ட்ஸ் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள். வேறு யாராலும் இவர்கள் அருகே வர முடியவில்லை. அதிலும் பாடல்கள் எண்ணிக்கையில் எஸ்பிபி ஏசுதாஸை விட அதிக எண்ணிக்கையில் பாட முடிந்தது. 15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி குவித்தார் எஸ்பிபி. பல்வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு பாடல்கள் தேவை எனும்போது இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக எஸ்பிபி இருந்தார்.
குரல் வித்தகன்
அப்படி மற்ற பாடகர்களுக்கு இல்லாத ஒரு தனித்துவம் பாலசுப்பிரமணியமிடம் இருந்தது. அது என்னவென்றால்.. துள்ளல் அல்லது பெப்பி என்று சொல்லலாம். பவர் என்று சொல்லலாம். தனது ஒரே பாடலில் அவரால் சோகமாகவும், மகிழ்ச்சியான ஸ்டைலிலும் குரலை மாற்றி விட முடியும். அழுதபடியே பாட்டை ஆரம்பித்து.. ரப்பப்பா, ரபப்பா.. என்று துள்ளலோடு முடிக்க முடியும். துள்ளலோடு ஆரம்பித்து சோகம் இழையோடும் குரலோடு அவரால் பாடலை முடிக்க முடியும். இந்த யுனிக்னஸ் வேறு எந்த பின்னணி பாடகரிடமும் கிடையாது.
மவுன ராகம்
உதாரணத்துக்கு.. "மௌன ராகம்" திரைப்படத்தில் இடம்பெறும் "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ" என்ற பாடலை எடுத்துக் கொள்ளலாம். கல்யாணம் முடிந்த சில நாட்களில், கணவரிடம், மனைவி விவாகரத்து கேட்கும் ஒரு சூழ்நிலையில் இந்த பாடல், அந்த கணவரால் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எனவே சோகம் ததும்ப அந்த பாட்டை ஆரம்பிப்பார் எஸ்பிபி.
உச்ச ஸ்தாபி
ஆனால் பல்லவி முடிந்து சரணம் உள்ளே செல்லும்போது, மோகன் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த வலியையும் அவரது மன ஓலத்தையும் தனது குரலில் உயர்த்தி பாடியிருப்பார். அப்போது அவர் ஹைபிச் என்ற நிலைக்கு சென்று சுருதியை ஓங்கி ஒலிப்பார். அடிவயிற்றிலிருந்து அந்த சத்தம் ஓலம் போல வரும். "தாமரை மேலேஏஏஏ.. நீர்த்த்துளி போல்.. தலைவனும் தலைவியும் வாழ்வதென்னஅஅஅ.. நண்பர்கள் போலேஏஏஏ.. வாழ்வதற்கு, மாலையும் மேளமும் தேவையென்னஅஅஅ.." என்று அந்த பாடல் நீளும். இதுதான் எஸ்பிபி.
வரைட்டி முடியும்
கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதை பார்வையாளர்களுக்கும் கடத்தி செல்லும் வல்லமை அவரது குரலில் இருந்தது. இப்படி ஒரே பாடலில் பல வரைட்டி காட்டக்கூடியவராகவும், கதாபாத்திரத்தை பார்ப்பவர்களுக்கு கடத்தக் கூடியவராகவும் இருந்த ஒரு சங்கீத பேராசான் வேறு யாரும் இருக்க முடியாது.
டாப் ஸ்டார்களின் முதல் சாய்ஸ்
இதனால்தான் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் அவரது ஹீரோ அறிமுகப் பாடலுக்கு பாலசுப்பிரமணியம் பின்னணி பாடி இருப்பார். ரஜினிகாந்த் என்றால் ஸ்டைல், ரஜினிகாந்த் என்றால் வேகம். அதற்கு ஈடுகொடுக்க வேறு ஒரு பின்னணி பாடகரால் முடியாது என்பதால் எஸ்பிபி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்வார்கள். தெலுங்கு திரையுலகில் முன்னணி ஸ்டார் சிரஞ்சிவி படங்களில், ஹீரோ அறிமுக பாடல்களிலும் எஸ்பிபிதான் உயிர் கொடுத்திருப்பார்.
ரஜினியை தடுமாற வைத்த பவர்
ஆனால் எஸ்பிபி பாடலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ரஜினிகாந்த் பல இடங்களில் தடுமாறியுள்ளார். முத்து திரைப்படத்தில் இடம்பெறும் ஒருவன் ஒருவன் முதலாளி திரைப்படத்தில் குதிரை வண்டி மீது அமர்ந்து கொண்டு கையை கையை வேகமாக ஆட்டி எஸ்பிபியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முயற்சிப்பார் ரஜினிகாந்த். ஏனெனில் மிகப்பெரிய நடனம் கற்றுக் கொண்ட ஹீரோக்களுக்கே எஸ்பிபி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. ரஜினிகாந்த் நடனம் விஷயத்தில் கொஞ்சம் வீக். எனவே எப்படியோ சமாளித்தால் போதும் என்ற நிலைக்கு சூப்பர் ஸ்டாரையே கொண்டு வந்துவிடும் எஸ்பிபியின் பவர்.
பல்லேலக்கா பாடல்
இதேபோன்றுதான் சிவாஜி திரைப்படத்திலும், பல்லேலக்கா பல்லேலக்கா என்ற பாடலின் போது ரஜினிகாந்தை வேக வேகமாக நடக்க வைத்து.. கேமராவை முன்னும் பின்னும் ஆட்டி, படம் எடுத்து இருப்பார் இயக்குனர். எஸ்பிபி-யின் அந்த வேகத்துக்கு ரஜினிகாந்த் ஈடு கொடுக்க முடியாது என்பதுதான் இதற்கு காரணம். இந்த பவர் வேறு எந்த ஒரு பாடகரின் குரலிலும் இல்லை. ஆனால் இன்று காற்றோடு கரைந்து விட்டது அந்தக் காந்தக் குரல்.