சைலேந்திர பாபுதான் டிஎன்பிஎஸ்சி தலைவராகணும்! ஸ்டபன்னாக இருந்த ஸ்டாலின்! ஓராண்டில் நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை அப்பதவிக்கு கொண்டு வர தமிழக அரசு எடுத்த முயற்சிகள் ஏன் எடுபடவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக சைலேந்திர பாபு ஓய்வு பெற்ற மாதத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. இந்த நிலையில் சைலேந்திர பாபு ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்குமாறும் 10 பேரை உறுப்பினர்களாக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோப்புகள் அனுப்பப்பட்டன.

ஆனால் இந்த பரிந்துரை மீது முடிவு ஏதும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பல்வேறு காரணங்களைக் கூறி கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்த ஆளுநர், நியமன அறிவிப்பை எப்படி வெளியிட்டீர்கள் என கேட்டிருந்தார்.
இதுகுறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் அப்போது கூறியிருந்ததாவது: விசாரித்த போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருப்போரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது வயது வரம்பு 62 ஆகும். இதில் எது முதலில் வருகிறதோ அதை எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சைலேந்திர பாபுவை நியமித்தால் மீண்டும் 6 மாதங்களில் இன்னொரு தலைவரை நியமிக்க வேண்டியிருக்கும். அதாவது சைலேந்திர பாபுவின் வயது 62 ஆகிவிடும் என்பதால் ஆளுநர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்வதற்கான காரணங்களை தமிழக அரசு விளக்கி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தது. நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன, யார் யார் விண்ணப்பித்தாரர்கள் போன்ற ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
அத்துடன் சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்குமாறு தமிழக ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்திருந்தது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கோரும் பரிந்துரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்தார். சைலேந்திர பாபுவின் நியமன பரிந்துரையில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. சைலேந்திர பாபுக்கு 62 வயது பூர்த்தியடைய 6 மாதங்கள் இருந்ததால் பரிந்துரையை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சைலேந்திர பாபுவுக்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதியுடன் 62 வயது முடிவடைந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருந்தது. அது போல் சைலேந்திர பாபுவின் வயதும் 62 பூர்த்தியானதால் இனியும் தாமதிக்க வேண்டாம் என கருதியே ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகரை டிஎன்பிஎஸ்சி தலைவராக தமிழக அரசு பரிந்துரைத்தது.
எஸ்.கே. பிரபாகர் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் நெடுஞ்சாலை துறையின் முதன்மை செயலாளராகவும் வருமான நிர்வாக ஆணையராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பிரபாகர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் ஆவார். நேர்மையானவர். இதனால் ஸ்டாலின், பிரபாகரை பரிந்துரைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications