அண்ணாமலையின் மீட்டிங்கிற்கு மறுநாளே.. ஆளுநரை சந்திக்க செல்லும் முதல்வர்.. பின்னணியில் பெரிய காரணம்?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு நடத்த உள்ளார். திடீரென ஆளுநரை முதல்வர் சந்திக்க முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி திமுகதான் பெருவாரியான இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 1003 இடங்களில் திமுகவும், 211 இடங்களிலும் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியே வரும் நிலையில், இன்னொரு பக்கம் திமுக எம்பி ரமேஷ் கொலை வழக்கில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் முந்திரி ஆலை ஊழியர் ஒருவரை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக எம்பி ரமேஷ் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று திடீரென பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எச். ராஜா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்என் ரவியை திடீரென சந்தித்தனர். திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு, பாஜக நிர்வாகியை தாக்கியது தொடர்பாக திமுக எம்பி ஞானதிரவியம் மீதான வழக்கு என்று பல விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆலோசனை
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை காக்க வேண்டும். குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்பிக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின் பேட்டி அளித்த பாஜக அண்ணாமலை, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு திமுக எம்பிக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆளுநர் இதில் கவனம் செலுத்துவேன் என்று உறுதிஅளித்தார் .

மனு
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது. இதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும், என்று கோரிக்கை வைத்து மனு அளித்தோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஆளுநரை அண்ணாமலை சந்தித்த மறுநாளே முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க செல்கிறார். இன்று மாலை ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்த உள்ளார்.

ஆளுநர் முதல்வர்
அதிகாரபூர்வமாக இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க செல்வதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீட் காரணமா?
ஆனால் முதல்வரின் சந்திப்பிற்கு பின் நீட் தேர்வு மட்டும் காரணமாக இருக்காது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை நிறைவேற்றுவது ஆளுநரின் கடமை. முதல்வர் நேரில் போய் இதற்காக பேச வேண்டும், கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

வேறு காரணம்
இதனால் முதல்வரின் சந்திப்பிற்கு வேறு காரணம் இருக்கலாம் என்ற அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவே முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் பேச உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களையும், பாகிஸ்தானோடு தற்போது தொடர்பில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களையும் என்ஐஏ அமைப்பு தீவிரமாக தேடி வருகிறது.

புலிகள்
கடந்த ஒரு வாரம் முன்பு கூட விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டார். 5 ஏகே 47 துப்பாக்கிகள் உட்பட பயங்கர ஆயுதங்கள் கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த என்ஐஏ சென்னையை சேர்ந்த சற்குணம் என்ற விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவரை கைது செய்தது.

கைது '
பாகிஸ்தானில் இருந்து இவர் இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதை பொருட்களை கடத்தி விடுதலை புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயன்றதாக என்ஐஏ புகார் வைத்துள்ளது. இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ ரெய்டு குறித்தும், பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்தும் ஆளுநரிடம் ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆளுநர் முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது .

அரசு ஆளுநர்
இதில் ஆளுநர் பெரிதாக அரசுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்கும் வாய்ப்பு இல்லை. அரசுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. ஆனாலும் ஆளுநர் என்கிற முறையில் முதல்வர் அவருடன் சட்ட ஒழுங்கு பற்றி பேசுவார் என்று கூறப்படுகிறது. அதோடு புதிய ஆளுநராக ஆர்என் ரவி பதவி ஏற்றபின் அவரிடம் முதல்வர் ஸ்டாலின் பெரிதாக ஆலோசனைகளை, சந்திப்புகளை நடத்தவில்லை. இதனால் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் இன்றைய சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications