லிஸ்ட்லயே இல்லையே! ஸ்ரீ வாருக்கு வண்டியை விடும் "டிடிவி".. ஆனா அங்கதான் ட்விஸ்டே! விழிக்கும் அதிமுக
சென்னை: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் மௌனம் காத்து வருகிறார். அதிமுகவில் நடக்கும் செயலால்.. அறிக்கை அளிப்பதோடு சரி.. வேறு எதுவும் வேண்டாம் என்பது போல அவர் ஒதுங்கி இருக்கிறார்.
அவரின் இந்த அமைதி.. புயலுக்கு முன்பாக நிலவும் அமைதி என்கிறார்கள் அமமுகவினர். டிடிவி தினகரனிடம் வேறு ஒரு திட்டம் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது.

ஓபிஎஸ் தீவிரம்
அதே சமயம் இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரண்டு வழக்குகளை போட்டுள்ளது. ஒன்று அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் கடந்த முறை உயர் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடுத்துள்ளது.

சசிகலா
இது போக இன்னொரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற சசிகலாவும் களமிறங்கி உள்ளார். அதிமுகவில் மோதல் நிலவும் நிலையில் எப்படியாவது கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவர் முயன்று வருகிறார். அதிமுகவில் முக்குலத்தோர் ஆதரவை பெறும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறார். அதேபோல் வடக்கு மண்டலத்தில் சுற்று பயணத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் முக்குலத்தோர் அல்லாதோர் ஆதரவையும் பெற அவர் திட்டமிட்டுள்ளார்.

டிடிவி தலையிடவில்லை
இப்படி சசிகலா, ஓபிஎஸ் இருவரும் பிசியாக உள்ள நிலையில் டிடிவி தினகரன் மட்டும் அறிக்கைகளை விடுவதை தவிர பெரிதாக எதுவும் பேசுவது இல்லை. எடப்பாடி - ஓபிஎஸ் மோதலை விமர்சனம் செய்து டிடிவி தினகரன் சில முறை ஊடகங்களில் பேசினார். ஆனால் இவர் பெரிதாக கூட்டங்கள், அல்லது பேரணிகள், சசிகலா போல புரட்சி பயணங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை. டிடிவி தினகரன் இப்படி அமைதியாக இருக்க வேறு காரணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

கட்சியை வலுப்படுத்தலாம்
அதிமுக விவகாரத்தில் நேரடியாக தலையிட அவர் விரும்பவில்லையாம். அதிமுகவில் இப்போது நடக்கும் மோதலில் நாம் தலையிட வேண்டாம். என்ன நடக்கிறதோ நடக்கட்டும். வேடிக்கை மட்டும் பார்க்கலாம். அதிமுகவில் நடக்கும் விஷயங்களில் கோர்ட்டும் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது நாம் தலையிட வேண்டாம் என்று டிடிவி தினகரன் அமைதியாக இருக்கிறாராம்.

வேறு திட்டம்
அதுமட்டுமின்றி அதிமுக மோதலை மனதில் வைத்து.. ஊரக உள்ளாட்சி தேர்தல் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் டிடிவி இருக்கிறாராம். முக்கியமாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ரேஸில் இல்லை. வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். இதன் காரணமாக அதிமுக வாக்குகளை, முக்குலத்தோர் வாக்குகளை அள்ள டிடிவி தினகரன் தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம்.

எங்கே?
அதேபோல் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அமமுக பொதுக்குழுவை நடத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டு உள்ளாராம். அதிமுக பொதுக்குழு அங்குதான் கடந்த வாரம் நடந்தது. மீண்டும் ஜூலை 11ம் தேதி அங்குதான் பொதுக்குழு நடக்க உள்ளது. இதே இடத்தில் டிடிவி தினகரன் ஏற்பாட்டில் அமமுக பொதுக்குழு ஆகஸ்ட் இறுதியில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் அதிமுக வேண்டாம். அமமுகவை பலப்படுத்துவோம் என்ற திட்டத்தில் டிடிவி தினகரன் இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications