"ஜில்" ஆகிப்போன சென்னை.. விட்டு விட்டு பெய்த மழை.. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாகவே காட்சி அளித்தது. இன்று சென்னையில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் பரவலாக நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாகவே காட்சி அளித்தது.

வாட்டி வைதைத்த வெயில் விடைபெற்று சென்னையில் மழை பெய்வது போலவே மதியத்தில் இருந்தே வானிலை இருந்தது. இரவு 7 மணியளவில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது. மாலை நேரத்தில் இருந்து விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழையாக இன்றி மிதமான மழையாக பெய்தது.
சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ததை காண முடிந்தது. இந்த மழையால் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழையால் சென்னையின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.
மாங்காடு, பூந்தமல்லி, நெற்குன்றம், ஆவடி, திருமுல்லைவயில் செம்பரம்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் தற்போது வரை மழை பெய்து கொண்டே இருக்கிறது. காற்றுடன் மழை பெய்து வருவதால் பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயின் கோட் இன்றி பைக்கில் வந்த வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது.
போரூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாதாரண நாட்களிலேயே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் தற்போது மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மிக மிக அதிகமாக உள்ளது. கொட்டும் மழையில் நனந்தபடியே வாகன ஓட்டிகள் சிக்கி தவிப்பதையும் காண முடிந்தது. நத்தை போல வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
கொட்டும் மழையில் நனந்தபடியே முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. புதுவையிலும் மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனிடையே, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஒடிசா நோக்கி காற்றழுத்த தாழ்வு நகரும் என்றும் பின்னர் மெதுவாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 26 ஆம் தேதி வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications