"பாப்பாத்தி, ஐட்டம்".. வதந்தியை உண்மையாக்கி விடலாமான்னு தோணுது.. எல்லாத்துக்கும் காரணம் "அவங்க"தான்!
பாஜகவில் இணைவது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்
சென்னை: "இதுவரை எந்த கட்சியின் பாலும் சாயாத நான், என்னை மதித்து வரவேற்கும் ஒரு கட்சியில் சேரலாமா என்று முதன் முறையாக யோசிக்கிறேன்... இதற்கு முழு காரணம், முழு பொறுப்பு, பகுத்தறிவு பாசறையின் பாதுகாவலர்கள்தான்" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நேற்று கந்த சஷ்டி திருவிழா தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று சூரசம்ஹாரத்தை கண்டு தரிசனம் செய்தனர்..
இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்து பேசியதாகவும், அவர் பாஜகவில் இணையப்போவதாகவும் செய்திகள் கசிந்தன.. இதையடுத்து, கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "அமித்ஷா முன்னிலையில் நான் இன்று பாஜகவில் சேர்கிறேன் என்று தெரிவிக்கும் விதமாக எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது.
வதந்திகள்
வதந்திகள் யதார்த்தத்தை விட சக்திவாய்ந்தவை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று தெரிவித்திருந்தார். அதாவது பாஜகவில் இணையவில்லை என்பதை வெளிப்படையாகவே கஸ்தூரி கூறியிருந்தார்.. இதையடுத்து, தன்னுடைய ஃபேஸ்புக்கில் மற்றொரு பதிவையும் கஸ்தூரி பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
அமித்ஷா
"இன்று காலையிலிருந்து போன் அடித்தவண்ணம் உள்ளது, ஓய்ந்தபாடில்லை... நான் பிஜேபியில் அமித் ஷா முன்னிலையில் இணைவதாக ஊரே பேசி கொள்கிறதாம், ப்ரெஸ்ஸிலிருந்து வித விதமாக விவரம் சொல்கிறார்கள்... போன் எடுத்து மாளவில்லை... பதில் சொல்லி சொல்லி tired ஆகுது. அதனால் ட்விட்டரில் என் பாணியில் மொத்தமாக ஒரு மறுப்பு வெளியிட்டேன். நான் பிஜேபியில் சேரவில்லை, இது சம்பந்தமே இல்லாத வதந்தி என்று!
விமர்சனங்கள்
ஏனென்றால் இன்றுவரை நான் அந்த எண்ணத்தில் இல்லவே இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பிஜேபியின் செயல்பாடுகளை விமர்சிக்க தயங்கியதே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும், தவறை விமர்சிக்க தயங்கியதில்லை... அனைத்து கட்சிகளிலும் இருந்து எனக்கு அழைப்பு வந்த வண்ணமே உள்ளது. ஆனால் நான் அவசரப்படவில்லை. எனக்கு அரசியல் என்றால் மக்கள் சேவை, மகளிர் உரிமைக்காக போராடுவது தான். கட்சியில் சேர்ந்து கோடி கோடியாக சுருட்டுவது இல்லை. அதனால் தமிழக அரசியலுக்கு நான் லாயக்கா என்ற சுயபரிசோதனையில் என்னை உட்படுத்தி கொண்டுள்ளேன்.
பயம்
ஆனால், அந்த மறுப்புக்கு வந்த பின்னூட்டங்களை படித்த பின், குறிப்பாக 'திராவிட பகுத்தறிவு' கட்சியினரின் கொச்சையான தாக்குதல்களை சந்திக்கையில்... எதிராளி ஜெயித்து விடுவானோ என்ற பயத்தால் வரும் வன்மத்தை, வெறுப்பை, எதிர்கொள்ள வேண்டி வரும்போது.. பாப்பாத்தி, சாணாத்தி, சங்கீ, ஐட்டம் , பொட்டச்சி முதலிய சொற்களை படிக்கும்பொழுது.. வதந்தியை உண்மையாகி விடலாமா என்று தோன்றுகிறது.
பாதுகாவலர்கள்
இதுவரை எந்த கட்சியின் பாலும் சாயாத நான் என்னை மதித்து வரவேற்கும் ஒரு கட்சியில் சேரலாமா என்று முதன் முறையாக யோசிக்கிறேன்... இதற்கு முழு காரணம், முழு பொறுப்பு, பகுத்தறிவு பாசறையின் பாதுகாவலர்கள்தான்" என்று தெரிவித்துள்ளார்... பாஜகவில் சேர போவதில்லை என்று ட்விட்டரில் தெளிவான விளக்கம் அளித்த பிறகும், அவரை சீண்டிவிட்டு பலர் கமெண்ட் போட்டு வருவதால், கஸ்தூரி கடுமையான அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.. அதனாலேயே இப்படி ஒரு ஃபேஸ்புக் பதிவையும் அவர் மனம் நொந்து பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.