மத்திய பாஜக அரசுக்கு எதிரான தமிழக அரசின் வக்பு மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரித்த அதிமுக!
சென்னை: தமிழக சட்டசபையில் மத்திய பாஜக அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக ஆதரித்தது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசிய நிலையில் அதிமுகவின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. தற்போது மத்திய அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது.
மத்திய பாஜக அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை அதிமுக தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.

முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடம் இருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல. வக்ஃபு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் கூட்டணி என்பது எப்போதும் நிரந்தரமானது அல்ல; இது மாறக்கூடியதுதான் என்றார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை இன்று சட்டசபையில் நிறைவேற்றியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த விவாதத்தின் போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்பி வேலுமணி, இந்த தீர்மானத்தை ஆதரித்து மத்திய அரசின் வக்பு வாரிய மசோதாவை விமர்சித்தார். இதன் பின்னர் தமிழ்நாடு சட்டசபையில், மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான தீர்மானம், அதிமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதனால் தமிழ்நாடு அரசின் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீதான அதிமுகவின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை அதிமுகவும் ஆதரித்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications