AIADMK Split: அதிமுக இரண்டாக உடைகிறதா?.. சசிகலா ரீஎன்ட்ரி?.. அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் பரபரப்பு!
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரண்டாக உடைந்ததை போல் சசிகலாவின் வருகையால் தற்போது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தோல்வி, இரட்டை தலைமை உள்ளிட்டவைகளால் அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு நேற்று இரவு முதலில் அச்சாரம் போட்டவர்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.
சசிகலா தலைமையில் அதிமுக இருந்தால் மட்டுமே ராணுவ கட்டுக்கோப்புடன் இருக்கும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சசிகலா தலைமையேற்க விருப்பம் இருக்கிறது. ஆனால் மேற்கு மண்டலத்தினரும், வடக்கு மண்டலத்தினரும் இதற்கு கடும் எதிர்ப்பாக உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, சி வி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா அதிமுகவில் இணைவதையும் தலைமையேற்பதையும் விரும்பவே இல்லை. ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் சசிகலாவின் கீழ் அதிமுக என்பதாக உள்ளது. தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியதை போல் ஒவ்வொரு மாவட்டத்தினரும் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றக் கூடும்.

சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?
மேலும் சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேச போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது இதற்கு நேர் எதிராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களுக்கு இருக்கும் சாய்ஸ், சசிகலா வருகையை எதிர்ப்பது, இல்லாவிட்டால் ஏற்பது.

சசிகலா வருகையை ஏற்பாரா இபிஎஸ்?
சசிகலா, தினகரன் வருகையை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என தகவலறிந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் கட்சி இரண்டாக பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது சசிகலா தலைமையில் ஓரணியாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்னொரு அணியாகவும் உடையவும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.

கட்சி உடைவது
கட்சி உடைவது என்பது அதிமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் யார் முதல்வராவது என்ற சர்ச்சையும் எழுந்தது. ஆர் . எம் வீரப்பனின் ஆதரவுடன் ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் இதை ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட அதிமுகவில் 33 பேர் மட்டுமே ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் எல்லாம் ஜானகி ராமச்சந்திரனைதான் ஆதரித்தனர். இதனால் அந்த 33 பேரையும் அப்போது சட்டசபை சபாநாயகராக இருந்த பிஎச் பாண்டியன் அவையிலிருந்து நீக்கினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
அது போல் ஏற்கெனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியலமைப்பு சட்ட நகலை எரித்ததாக 10 திமுக உறுப்பினர்களும் நீக்கப்பட்டனர். ஆக மொத்தம் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 பேரிலிருந்து 191 ஆக குறைந்தது. ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான புதிய அரசின் மீது 1988 ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திமுக உள்ளிட்டவை வாக்கெடுப்பை புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் ஜானகி ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் இடையே சட்டசபையில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது.

அதிமுக அரசு கலைப்பு
எனினும் நடந்த வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் வென்றாலும் வன்முறையை காரணம் காட்டி அதிமுக அரசை மத்திய அரசு கலைத்துவிட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாக பிரிந்தது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஜானகி ராமச்சந்திரன் அணிக்கு இரட்டை புறா சின்னமும் கிடைத்தது. பின்னர் நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி வென்று இரட்டை இலை சின்னத்தை தக்க வைத்து கொண்டது.

ஜெயலலிதா மறைந்த போது பிளந்த அதிமுக
அதுபோல் ஜெயலலிதா மறைந்த போது ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா முதல்வராகும் கனவில் இருந்ததால் ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா பெற கூறியதால் அவரும் ராஜினாமா செய்தார். பின்னர் ஓபிஎஸ் மெரினாவில் தர்மயுத்தம் நடத்தினார். இதையடுத்து ஓபிஎஸ்ஸாலோ அல்லது திமுகவாலோ அதிமுக ஆட்சி கவிழலாம் என நினைத்த சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்திருந்தார். ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரினார். அவர் ஆட்சி அமைக்க சசிகலாவை அழைப்பதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறை சென்றார். அத்துடன் சசிகலாவின் முதல்வர் கனவு நொறுங்கி போனது.

இரு அணிகள்
பின்னர் ஓபிஎஸ் தலைமையிலான ஒரு அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இன்னொரு அணி என அதிமுக பிரிந்தது. அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலையை பெற ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அதிமுகவில் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை சேர்க்க கூடாது என்ற நிபந்தனையை ஓபிஎஸ் விதித்தார்.
Recommended Video

மீண்டும் உடைகிறதா அதிமுக
இதையேற்று கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. தற்போது சசிகலாவின் வருகையால் அதிமுக மீண்டும் பிளவுப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் இரண்டாக பிரிந்தால் இரட்டை இலை மீண்டும் முடக்கப்படலாம். அப்போது சசிகலா அணி, ஈபிஎஸ் அணியில் யாராவது பெரும்பான்மையை நிரூபித்து இரட்டை இலையை பெறுவார்களா அல்லது இரு அணிகளும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த அதிமுக ஆவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications