மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் விஜய்க்கு அதிமுக ஆதரவு கொடுக்குமா? பொன்னையன் கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 100 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதிமுக ஆதரவு கொடுக்குமா என்று பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பொன்னையன் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் ஆவார் என்று கூறினார்.
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெகவை பொறுத்தவரை கணக்கை துல்லியமாக போட்டு பார்த்தால் அவர்களுக்கு நகர்புற பகுதிகளில் திமுகவிற்கு ஏற்பட்ட தொய்வு, தவெகவிற்கு வெற்றியாக அமைந்துள்ளது. காரணம் நகர்புற வாக்கை பொறுத்தவரை 10 சதவீதம் வாக்கு மட்டுமே பெற முடிந்துள்ளது.

90 சதவீதம் கிராமப்புற வாக்குகள் உள்ளன. ஊரக வாக்குகளை எண்ணும் போதுதான் தவெகவின் நிலை பின் தங்கிவிடும். மற்ற இயக்கங்கள் முன்னுக்கு வர வாய்ப்பு உள்ளது. ஊரக பகுதிகள்தான் முடிவு செய்யும்" என்றார். அப்போது செய்தியாளர்கள், அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த பொன்னையன், "தவெகவை பொறுத்தவரை அது தனிக்கட்சி.. தவெக, அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார். தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் ஆவார். அதுவே தேர்தல் முடிவாக இருக்கும்" என்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக விஜய் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவெகவினர் கொண்டாட்டத்தில் இருக்கும் அதே வேளையில் விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தவெக 100 - 108 வரையிலும், திமுக 65 -70 வரையிலும், அதிமுக 60 - 68 வரையிலும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன. இதனால் தொங்கு சட்டசபையே அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications