வஞ்சத்தில் வீழ்ந்தார் வைத்திலிங்கம்.. எங்கள் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.. ஜெயக்குமார் அழைப்பு!
அதிமுகவில் வைத்திலிங்கம் இணைய வேண்டும் என்று ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் எங்கள் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்து வைத்திலிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜெயக்குமார் நேரடியாக வைத்திலிங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த பின், அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருந்தார். இதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், பதில் அறிக்கை வெளியிட்டார். அதில், அந்த அறிக்கையில், பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்று விமர்சித்துள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தல்
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளையும், நாளை மறுதினம் மாநில நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெயக்குமார் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பதவியேற்றது போல் வைத்திலிங்கம் கூறியுள்ளார். ஆனால் என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததும், 2016ல் என்னை வெல்ல வைத்து அமைச்சராக்கியதும் ஜெயலலிதா தான். அரசியல் ரீதியாக எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசக் கூடாது. இதனை தான் எனது அறிக்கையிலும் கூறி இருந்தேன்.

வைத்திலிங்கத்திற்கு அழைப்பு
எனது நெருங்கிய நண்பர் வைத்திலிங்கம். அவர் இப்படி தரம் தாழ்ந்து போய்விட்டாரே என்பது தான் சோகமாக இருக்கிறது. கர்ணன் படத்தில் வரும் பாடலில் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என்று வரும். அதுபோல் வைத்திலிங்கம் வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார். அவர் மீண்டு எங்கள் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வைத்திலிங்கத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications