பாஜக தோல்வி 2024இல் தொடருமா? ... மோடி பிம்பம் உடைபடுகிறதா?... உண்மை என்ன?
சென்னை: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மதவாதத்திற்கு எதிரான கட்சிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்கிற பா.ஜ.க. முன்வைத்த முழக்கத்தின் மீது மிகப் பெரிய இடி விழுந்திருக்கிறது.
இந்த இடி, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலும் தொடரும் என்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா.
முதலமைச்சர் ஸ்டாலின், 'திராவிட நிலப்பரப்பில் எங்கும் பாஜக இல்லை' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

"மோடியின் வித்தைகள் கர்நாடகத்தில் பலிக்கவில்லை. பூக்களை எல்லாம் வாரி இரைத்து மோடியை வரவேற்றார்கள். மோடியின் தலையில் பூக்களைக் கொட்டினார்களே தவிர, மக்கள் வாக்குகளைக் கொட்டவில்லை. அந்த விசயத்தில் மக்கள் மிகக் கவனமாக இருந்துவிட்டார்கள்" என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
"நாங்கள் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை ஒரே விஷயத்தை எங்களிடம் தொடர்ந்து சொன்னார்கள். இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது கர்நாடக மக்களுக்கு மட்டும் இல்லை; அது இந்திய தேசத்தின் ஆட்சிமாற்றத்திற்கான தொடக்கம்." என்றார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை.

உண்மையில், இது கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமான வெற்றியா? அல்லது வரப்போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா? எது சரி? சிலரிடம் பேசினோம்.
கர்நாடக முடிவுகள் ஒரு இண்டிகேட்டர்: முதலில் நம் அழைப்பை ஏற்றவர் ஆழி செந்தில்நாதன். "இந்தத் தேர்தல் முடிவு, ஒரு இண்டிகேட்டர் ஆக இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதைப் போல, திராவிடப் பெருநிலத்திலிருந்து பாஜக துடைத்து எறியப்பட்டுள்ளது என்பதும் ஒரு உண்மை. கர்நாடகா, பாஜகவுக்கு ஒரு மாநிலம் மட்டும் இல்லை. அவர்கள் தென்னிந்தியாவைக் கைப்பற்றுவதற்கான ஒரு களம், இது. வட இந்தியாவில் அவர்கள் நடைமுறைப்படுத்திய பல மதவாத, பிற்போக்கு வேலைகளை இங்கே நடத்துவதற்கான ஒரு சோதனைக்கூடமாகவே கர்நாடகத்தை அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் குஜராத்தில் செய்தோம், உத்தரப்பிரதேசத்தில் செய்தோம், அப்படி தென்னிந்தியாவிலும் செய்வதற்காக ஒரு சோதனைக் கூடம்தான் கர்நாடகா என்று அவர்கள் சொன்னார்கள். அதம் அடிப்படையில்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல வன்முறைகளைக் கர்நாடகத்தில் அரங்கேற்றினார்கள்.
இது ஏதோ சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல் மட்டும் அல்ல; ஒட்டுமொத்தமாகவே அம்மாநிலத்தை பிற்போக்கான திசைக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகவே அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள் இருந்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவு மூலம் கர்நாடக மக்கள் அதை நிராகரித்திருக்கிறார்கள்.

சென்ற முறை 100க்கும் மேலான இடங்களை வென்ற பாஜகவால், இன்றைக்கு அதில் பாதிகூட வரமுடியவில்லை. கர்நாடகத்தில் பாஜகவின் கோட்டை எனச் சொல்லப்பட்ட பல தொகுதிகளில் அக்கட்சி தகர்ந்துபோய் நிற்கிறது.
குறிப்பாக வடகர்நாடகம், மத்திய கர்நாடகத்தைச் சொல்லலாம். அதேபோல் லிங்காயத்து மக்கள் மத்தியில் எங்களுக்குப் பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது என பாஜகவினர் சொன்னது அனைத்தும் காணாமல் போய் உள்ளது. சரியாகச் சொன்னால், தமிழ்நாட்டைப்போல கர்நாடகம் மாறியுள்ளது.

ஆக, இந்த மாற்றம் என்பது ஒரு மாநிலத் தேர்தலில் நடந்துள்ள மாற்றம் மட்டுமே இல்லை. வடமாநிலங்களில் உள்ளதைப் போல ஒரு மதவாத அடிப்படைவாதத்தைத் தென்னிந்தியாவிலும் பாஜக கொண்டுவர நினைத்தது இல்லையா? அதற்குக் கிடைத்துள்ள பலத்த அடிதான் இது.
அப்படிப் பார்த்தால் இந்த முடிவுக்கு ஒரு அகில இந்தியப் பரிமாணம் கிடைத்துவிடும். 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டம் 2023 மே மாதமே தொடங்கிவிட்டது என்று நான் சொல்கிறேன். இனி தொடர்ந்து தேர்தல்கள் நடைபெற உள்ளன. தெலுங்கானாவில் தேர்தல் வர உள்ளது. அடுத்து, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்திஸ்கர் என பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதில், பல மாநிலங்களில் காங்கிரஸ்தான் பிரதானமாக இருக்கிறது. தெலுங்கானாவில் பாஜகவுக்கு முக்கியத்துவமே இல்லை. நான் முன்னதாகக் குறிப்பிட்ட வேறு சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக அல்லது பிரதான எதிர்க்கட்சியாகவே உள்ளது. எப்படிப் பார்த்தாலும் இனி வரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களில் பாஜகவுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கப் போவதில்லை என்பதைத்தான் இந்தக் கர்நாடகா தேர்தல் முடிவுகள் நமக்கு முன்பே சொல்லி உள்ளன." என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
உடைக்கப்பட்ட மோடி பிம்பம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இலட்சுமி ராமச்சந்திரன், "இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது." என்கிறார்.

"ஏனென்றால், காங்கிரசும் பாஜகவும் நேரடியாக மோதுகின்ற மாநிலங்களில் பிரதானமான மாநிலம், கர்நாடகம். குறிப்பாகச் சொன்னால், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், சத்திஸ்கர், இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் எல்லாம் காங்கிரசும் பாஜகவும்தான் பிரதான கட்சிகள். இவற்றில் எல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுவது வழக்கம்.
ஆகவே, கர்நாடகத்தில் காங்கிரசுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி, அப்படியே, குறிப்பிட்ட மாநிலங்களில் வரும் காலங்களில் நிச்சயம் பரவும். பாஜக நேரடியாக எங்கள் கட்சியுடன் மோதுகின்ற இடங்களில் நாங்கள் கர்நாடகத்தில் களப்பணி செய்ததைப்போல், தேர்தல் வியூகம் வகுத்ததைப் போல் செய்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் என்பதை எங்கள் கட்சியின் தொண்டர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர்.
அதுவே எங்களுக்கு மாபெரும் வெற்றி. மோடி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை நிச்சயம் உடைக்க முடியும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு எங்களுக்குக் கற்றுத்தந்துள்ளது. மோடி போகின்ற இடங்களில் எல்லாம் 98 முறை என்னைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் அவதூறாகப் பேசி உள்ளனர் என்றார். மேடைக்கு மேடை அனுதாபம் தேடினார், மோடி. மக்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. புறக்கணித்துள்ளனர்.
பிரியங்கா காந்தி, 'எனது சகோதரரைப் பற்றி மோடி சொன்னதை எல்லாம் சேர்த்தால் ஒரு புத்தகமாகவே போட்டுவிடலாம்' என்று பதிலடி கொடுத்தார்.

பிரதமரை யாரேனும் விமர்சித்துவிட்டால் அவ்வளவுதான், தேர்தலில் தோல்வியைத் தழுவிவிடுவார்கள் என்ற மாய பிம்பம் உடைக்கப்பட்டுவிட்டது. மதவாதத்தை வைத்து அரசியல் சூழ்ச்சியில் இறங்கினார்கள்.
பஜ்ரங்தள் என்ற அமைப்பைத் தடைசெய்வோம் என்றதும், அதைவைத்து சூழ்ச்சி செய்தார்கள். பஜ்ரங் தள் என்பதை பஜ்ரங் பலி எனத் திரித்தார்கள். பஜ்ரங் என்றால் ஹனுமான். ஆகவே காங்கிரஸ் கட்சியினர் இந்துக்களுக்கு எதிராகப் பேசிவிட்டார்கள் என்றார் மோடி. இதை எதையும் காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. மக்கள் பிரச்சினையை மட்டும் பேசி ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை கர்நாடகத் தேர்தல் நிரூபித்துள்ளது.
ஆக, மதப் பிரச்சினைகளைப் பேசி அரசியல் செய்தால் இனி எடுபட முடியாது என்பதை இந்த முடிவுகள் காட்டி உள்ளன. ஆகவே, மோடி பிம்பம் இனி வரும் காலங்களில் மேலும் உடைக்கப்படும்." என அழுத்தமாகச் சொல்கிறார், இலட்சுமி ராமச்சந்திரன்.

வார் ரூம் பாலிசிக்கு பெரிய அடி: கர்நாடகத்தில் பாஜக மரண அடி வாங்கி உள்ளது எனக் கூறுகிறார், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்.
"இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி 20 முறை கர்நாடகத்துக்கு வருகை தந்திருக்கிறார். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பல திட்டங்களை அறிவித்தார். பஜ்ரங் தள் அமைப்பைத் தடைசெய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அதை அப்படியே ஹனுமானை இவர்கள் அவமதித்துவிட்டார்கள் என்று திசைமாற்றினார். எனவே கர்நாடக மக்கள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் செல்லும் போது பஜ்ரங் வாலி என்று சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இப்படி எல்லாம் ஒரு பிரதமர் பேசுகிறார். நேரடியாக வெறுப்பு அரசியலைத் தூண்டிவிட்டார். அதைக்கூட நாங்கள் கர்நாடக மக்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது 'பாஜக காலி' என்று சொல்லப் போகிறார்கள் என்று பதிலடியாகச் சொன்னோம்.
நாங்கள் சொன்னதைப்போல கர்நாடக மக்கள் பாஜகவை காலிசெய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பாஜக இல்லை. கேரளாவில் இல்லை. ஆந்திராவில் இல்லை. தெலுங்கானாவில் இல்லை. இப்போது கர்நாடகத்திலும் இல்லை.
உண்மையிலேயே, தென்னகம், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியதாக மாறியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலை தேர்தல் பணிக்காகச் சென்றார். அவரை சிங்கம் என்று பெருமிதம் பேசினார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டு வார் ரூம் பாலிசிக்கு கர்நாடக மக்கள் மிகப் பெரிய தோல்வியை பரிசளித்திருக்கிறார்கள். இந்தத் தோல்வி, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்." என்கிறார், மதுக்கூர் இராமலிங்கம்.
'தென் இந்தியாவிற்கான நுழைவாயில்தான் கர்நாடகம்' என்று கூறிவந்தனர், பாஜகவினர். அந்த நுழைவு வாயில் இன்று இழுத்து மூடப்பட்டுள்ளது என மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications