தங்க தமிழ்ச்செல்வனை இவ்வளவு அதீதமாக திமுக நம்பலாமா.. சாதகமாக இருக்குமா?
தேனியில் செல்வாக்கை பெருக்குமா திமுக என்பது சந்தேகமாக உள்ளது
Recommended Video
சென்னை: தங்க தமிழ்செல்வனை திமுக தலைவர் ஸ்டாலின் அளவுக்கு அதிகமாக நம்பி உள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கை திமுகவுக்கு சாதகமாக அமையுமா என்பதுதான் கேள்வி!
ஜெயலலிதா காலத்தில் தேனியில் ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருந்தார் தங்க தமிழ்செல்வன். துணை முதல்வர் உட்பட பல பொறுப்புகளை ஓபிஎஸ்-க்கு ஜெயலலிதா கொடுத்ததற்கு காரணம், கட்சியில் அவருக்கு இருந்த மரியாதை, ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ்-க்கு இருந்த உண்மையான விசுவாசம்.
பலமுறை ஓபிஎஸ்-ன் விசுவாசத்தை கண்டு ஜெயலலிதாவே புல்லரித்து போய் உள்ளார். அதனால், அவர் மறைவுவரை, ஓபிஎஸ்-க்கு அடுத்த கட்டத்தில்தான் தங்க தமிழ்செல்வனை வைத்திருந்தார்.

தோல்வி
இருந்தாலும், டிடிவி தினகரன் ஆர்கே நகர் வெற்றிக்குபிறகு உச்சியில் இருந்த நேரம், தேனியில் ஓபிஎஸ்-க்கு நிகரான இடத்தை தங்க தமிழ்செல்வன் கொண்டு வந்ததை இல்லையென்று சொல்லிவிட முடியாது. சரிக்கு சரி நிகரான செல்வாக்கில்தான் தங்க தமிழ்செல்வன் இருந்தார். ஆனால் எல்லாம் அமமுக தேர்தலில் தோற்கும்வரையே நீடித்தது!

தேனி
ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்று டெல்லிவரை சென்றாகிவிட்டது. ஏற்கனவே மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளவர் ஓபிஎஸ். அது போதாமல், மகனின் செயல்பாடுகள் பாஜகவுக்கு திருப்திகரமாக அமைந்து வருகிறது. இதைதவிர, தேனியில் பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகளையும் ரவீந்திரநாத் உடனுக்குடன் எடுத்து வருவதாகவே தெரிகிறது.

செல்வாக்கு
எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும், இளம்வயது ரவீந்திரநாத் அரவணைத்து செல்கிறார் என்ற நற்பெயரும் கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தேனியில் தங்கதமிழ்செல்வனுக்கு முன்பு இருந்த அதே மதிப்பு இப்போது இல்லை என்றும், ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக தேனி எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்றே பெயர் வாங்கியுள்ளதுடன், திமுகவினால் அந்த தொகுதியில் முழுவதுமாக கால் ஊன்ற முடியாத சூழலும் உள்ளதை அரசியல் வரலாறு நமக்கு காட்டி வருகிறது.

நம்பகத்தன்மை
இதன்காரணமாகவே, தேனியில் உள்ள தங்க தமிழ்செல்வனின் மொத்த ஆதரவையும் அப்படியே திமுக பக்கம் அள்ளி கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம் என்றும், அதற்காகவே இந்த கொ.ப.செ. பதவி தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக, அமமுக, இப்போது திமுக என தாவி, தாவி கொண்டிருப்பவர் மீது தொகுதி மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்றே சொல்கிறார்கள்.

பயன் தருமா?
ஒரு பக்கம் ஓபிஎஸ்-ன் வளர்ச்சி பெருகி கொண்டே வரும்நிலையில், மற்றொரு பக்கம் இவ்வளவு பெரிய பொறுப்பினை கொடுத்தாலும், அது திமுகவுக்கு நன்மை பயக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications