அமைச்சர் துரைமுருகன் கைதாகிறாரா? மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு
சென்னை: மூத்த அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்தச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சும் எழுந்துள்ளது
கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் துரைமுருகன். அப்போது 2007 முதல் 2009 வரை காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக இவர் மீது 2011ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது 2011 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை வைத்த கோரிக்கையை ஏற்றுச் சென்னை ஐகோர்ட், துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது..
இதற்கிடையே துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை. அவரது மனைவி மட்டும் நேரில் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிமன்றம் சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்தது.
அதேநேரம் அமைச்சர் துரைமுருகன் இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்டைச் செப்டம்பர் 15ஆம் தேதி அமல்படுத்தத் தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அரசியல் ரீதியாக மிக முக்கியமான உத்தரவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், துரைமுருகன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவு தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் சென்றுள்ள நிலையில், அவருடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் சட்ட வல்லுநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சும் எழுந்துள்ளது












Click it and Unblock the Notifications