வீட்டு மனைக்குள் கடை இருந்தால் கூடுதல் கட்டணமா? தமிழக பதிவுத்துறை வெளியிட்ட புதிய விதிமுறைகள்
சென்னை: சொத்து வழிகாட்டி மதிப்பு நிர்ணயத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு இனி தனியாக வணிக ரீதியிலான கூடுதல் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யத் தேவையில்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.. இதன் மூலம் நில நிலவரம் மற்றும் வகைப்பாடுகளைக் கணக்கிடுவதில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, பொதுமக்கள் கூடுதல் கட்டணச் சுமையின்றி எளிதாகப் பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.. அதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்..!!
பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் உறுதியாக இருப்பவர் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.. இதற்காகவே அவர் பொறுப்பேற்றது முதல் பதிவுத்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

சாமானிய மக்களும் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யும் வகையில், தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கித் துறையின் வெளிப்படைத்தன்மையை அவர் இப்போது அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்..!!
சொத்து வாங்குபவர்கள் நலன்
அந்த வரிசையில், பொதுமக்கள் மற்றும் சொத்து வாங்குபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயத்தில் நிலவி வந்த குழப்பங்களைத் தீர்க்க ஒரு புதிய நடைமுறையை அறிவித்துள்ளார்.. பல மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் தணிக்கை அலுவலர்கள் வழிகாட்டி மதிப்பு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது கவனத்திற்கு வந்ததையடுத்து, 05.05.2026 அன்று இந்த முக்கியச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
ஒரு தெருவானது குடியிருப்புப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அங்கு அமையப் பெற்றுள்ள கடைகள், தொழிற்சாலைகள் அல்லது கல்வி நிறுவனங்கள் விற்பனைக்கு வரும்போது அவற்றுக்குத் தனியாக வணிக ரீதியிலான மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. அந்தத் தெருவிற்கு ஏற்கனவே என்ன குடியிருப்பு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதையே பயன்படுத்தினால் போதுமானது.
வணிகப்பகுதி மதிப்பு
இதேபோல் ஒரு குடியிருப்புப் பகுதியில் தொழிற்சாலை நிலம் விற்பனைக்கு வந்தாலும், அதற்கெனத் தனியாகத் தொழிற்சாலை வகைப்பாட்டில் மதிப்பு நிர்ணயம் செய்யத் தேவையில்லை..
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணைக்குழுக்களால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பையே அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.. தொழிற்சாலை நிலங்களைப் பொறுத்தவரை, ஒரு கிராமத்தில் வணிகப் பகுதி மதிப்பு என்பது குடியிருப்பு பகுதியை விட அதிகமாகவும், குடியிருப்புப் பகுதி மதிப்பு விவசாய நில மதிப்பை விட அதிகமாகவும் இருக்கும்.. இதனால் தொழிற்சாலை நிலங்களுக்குத் தனியாக மதிப்பு நிர்ணயம் செய்யத் தேவையில்லை.
ஏற்கனவே உள்ள குடியிருப்பு அல்லது வணிகப் பகுதி மதிப்பையே பின்பற்றலாம்.. இருப்பினும், மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குள் அமையும் தொழிற்சாலைகளுக்குச் சதுர அடி அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.. இந்த மதிப்பானது வணிகப் பகுதி > குடியிருப்பு பகுதி > தொழிற்சாலை பகுதி > விவசாய பகுதி என்ற வரிசையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்..
வழிகாட்டி மதிப்பு
குறிப்பாக, ஒரே சுற்றுச்சுவருக்குள் இயங்கும் பெரிய தொழிற்சாலை வளாகங்களில், முழு நிலத்திற்கும் தொழிற்சாலை மதிப்பை நிர்ணயம் செய்யாமல், கட்டிடம் அல்லது தொழிற்சாலை பயன்பாட்டில் உள்ள உட்பிரிவு எண்ணிற்கே அந்த வகை மதிப்பை கணக்கிட்டு, மீதமுள்ள காலி இடங்களுக்கு வழக்கமான வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
இதன் மூலம் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு, சரியான மதிப்பீடு உறுதி செய்யப்படுகிறது.. அதே சமயம், கிராமப்புறங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணை, பட்டாசு தொழிற்சாலை, ஜல்லி கிரஷர், இறால் பண்ணை, காற்றாலை, சூரிய மின்சக்தி நிலையங்கள், தென்னை நார் மற்றும் கயிறு தொழில் போன்ற தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டியில் உள்ள விவசாய மதிப்பையே தொடர்ந்து பயன்படுத்தலாம்.
புல எண்கள் - எல்லைகள்
மேலும், ஒரு சொத்து பல புல எண்களில் கட்டுப்பட்டு, ஒரே நான்கு எல்லைக்குள் அமைந்திருக்கும் போது, அனைத்துப் புல எண்களுக்கும் அதிகபட்ச மதிப்பைச் சுமத்த வேண்டிய அவசியமில்லை; அந்தந்த புல எண்களுக்குரிய மதிப்பை மட்டும் கணக்கிட்டால் போதுமானது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையைப் பொறுத்தவரை, கூட்டு மதிப்பு (Composite Value) நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நெறிமுறைகளைத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பதிவு அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனப் பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்..
வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்
பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள இந்த புதிய தெளிவுரைகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் நிம்மதியையும் பொருளாதார நன்மைகளையும் வழங்கக்கூடியவை.
முக்கியமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு இனி அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகப்படியான "வணிக ரீதியிலான" வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய முடியாது என்பதால், தேவையற்ற கூடுதல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணச் சுமை குறையும்.
அதேபோல், ஒரே சுற்றுச்சுவருக்குள் இருக்கும் பெரிய தொழிற்சாலை வளாகங்களில் கட்டிடம் இருக்கும் பகுதிக்கு மட்டும் தொழிற்சாலை மதிப்பையும், மீதமுள்ள காலி இடங்களுக்குச் சாதாரண வழிகாட்டி மதிப்பையும் கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளதால், முழு நிலத்திற்கும் அதிகப்பட்ச மதிப்பைக் கட்ட வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
இதன் மூலம் சொத்து மதிப்பீட்டில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்குவதுடன், சார்பதிவாளர் அலுவலகங்களில் தேவையற்ற ஆய்வுகள் மற்றும் காலதாமதமின்றி பொதுமக்கள் தங்கள் பத்திரப்பதிவை விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது..!!!












Click it and Unblock the Notifications