அப்பாவை காணோம்! கண்கள் சிவந்த திமுகவினர்.. "ஸ்டாலின் வருவார், சீக்கிரமே வருவார்" அடியோடு மாறும் களம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் களத்தின் பார்வையும் திருச்சி கிழக்கு தொகுதியின் பக்கமே திரும்பியிருக்கிறது... முதல்வர் விஜய் ராஜினாமா செய்த இந்தத் தொகுதியில், சென்னை கொளத்தூரில் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை களம் இறக்க திமுக தீவிரமாக வியூகம் அமைத்து வருகிறதாம்.. ஒருவேளை ஸ்டாலின் இங்கு வெற்றி பெற்றால், அரசியல் களத்தில் நடக்க போகும் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்?
தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வியை திமுகவினரால் இன்னமும் ஜீரணிக்கவே முடியவில்லை..

அப்பாவை காணோம்
அவர் சட்டசபைக்குள் வர முடியாத சூழலை, இப்போதைய முதல்வர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, "அப்பாவை காணோம்" என்று சட்டசபையிலேயே நேரடியாக விமர்சித்துப் பேசினார். ஏற்கனவே ஸ்டாலினின் தோல்வியால் சோகத்தில் இருந்த தி.மு.க தொண்டர்களை விஜய்யின் இந்த விமர்சனம் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.. எரிச்சலையும் தந்துவிட்டது.
இதனிடையே, முதல்வர் விஜய் தான் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய மேலும் 5 தொகுதிகளும் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன.
கிழக்கு திருச்சி தொகுதி
இந்த 6 தொகுதி இடைத்தேர்தல்களில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திருச்சி கிழக்கின் மீதே பதிந்துள்ளது. காரணம், இங்கு ஸ்டாலினை களம் இறக்க திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "வருவார், எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டசபைக்கு வருவார்; இது உறுதி" என அதிரடியாக முழங்கினார்.
ஸ்டாலின் முடிவு என்ன
ஆனால் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, "இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று புன்னகையுடன் கூறி சஸ்பென்ஸை நீட்டிக்கச் செய்துள்ளார்.
ஒருவேளை திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியானால், அது தமிழக அரசியலில் பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மாற்றம் வந்துருமோ
முதலாவதாக, முதல்வர் விஜய் ராஜினாமா செய்த அதே தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவது, இந்த இடைத்தேர்தலை ஒரு மினி பொதுத்தேர்தல் போன்ற பிரம்மாண்ட அந்தஸ்துக்கு உயர்த்தும், விஜய் மற்றும் ஸ்டாலின் ஆகிய 2 ஆளுமைகளின் செல்வாக்கிற்கான நேரடி யுத்தமாக இது மாறும்.
இரண்டாவதாக, இந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தால், அது திமுக தொண்டர்களுக்கு இழந்த பலத்தை மீட்டெடுத்து மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். விஜய்யின் "அப்பாவை காணோம்" என்ற விமர்சனத்திற்குச் சட்டமன்றத்திலேயே ஸ்டாலின் நேரடியாகப் பதிலடி கொடுக்கும் சூழல் உருவாகும்.
அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினும் உள்ளே வந்தால் சட்டமன்றத்தில் தி.மு.கவின் ஆதிக்கமும், ஆக்ரோஷமும் பல மடங்கு அதிகரிக்கும்.
திருச்சி கிழக்கு - திமுக கோட்டை
மூன்றாவதாக, திருச்சி எப்போதும் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஒரு பகுதி என்பதால், அங்கு ஸ்டாலின் களம் காண்பது கட்சியின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும்.
அதேசமயம் இப்போதைய ஆளுங்கட்சியான விஜய்யின் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒரு கவுரவப் பிரச்சினையாக மாறும். தங்களின் முதல்வர் ராஜினாமா செய்த தொகுதியைத் தக்கவைக்க ஆளுங்கட்சியும், விஜய்யின் விமர்சனத்திற்குப் பழிதீர்க்க திமுகவும் முழு பலத்தையும் திரட்டிப் போராடும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி இதுவரை தமிழகம் கண்டிராத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் போர்க்களமாக மாறும் என்று ஆருடம் சொல்கிறார்கள் நிபுணர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications