எடப்பாடிக்கு பெரிய அடி.. "எல்லாமே" கிடைத்தும் சறுக்கிய இரட்டை இலை.. ஓபிஎஸ்க்கு ஹாப்பி.. போச்சா?
ஒற்றை தலைமை எடுபடவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் சாதகமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 19000 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 7500 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 1100 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 200 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. நாம் தமிழர், தேமுதிக இந்த முறை டெபாசிட் பெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மிக மோசம்
தற்போது இருக்கும் நிலவரப்படி பார்த்தால் கடந்த முறையை விட காங்கிரஸ் இந்த முறை அதிக வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று திமுக கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் பெறப்பட்ட வாக்கு விவரம்,
நம்பர் 1 - காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம்
நம்பர் 2- தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம்
நம்பர் 3- நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம்
நம்பர் 4- மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம்

வாக்கு வித்தியாசம்
அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை வாக்கு வித்தியாசம் 15 ஆயிரம் கூட இருக்கலாம் அல்லது அதையும் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. அங்கு இதுவரை நடந்த தேர்தல் எதிலும் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திற்கு மேல் வேட்பாளர்கள் வென்றது இல்லை. ஆனால் இந்த முறை காங்கிரஸ் - திமுக கூட்டணி அதை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் சாதகமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தேர்தலில் எடப்பாடிக்கு பல்வேறு விஷயங்கள் சாதகமாக இருந்தன, அதாவது
1. எடப்பாடிக்கு சின்னம் கிடைத்தது.
2. எடப்பாடி பொதுக்குழு வழக்கில் வென்றார்.
3. பாஜக ஆதரவு கிடைத்தது.
4. அமமுக, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை களமிறக்கவில்லை.
5. கொங்கு மண்டலத்தில் தேர்தல் நடந்தது.

தோல்வி
ஆனால் இவ்வளவு விஷயங்கள் சாதகமாக இருந்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கடும் பின்னடைவை சந்தித்து உள்ளார். ஈரோடு கிழக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம்.. ஒற்றை தலைமை எடுபடவில்லை என்று வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடியால் கொங்கு மண்டலத்திலேயே வெல்ல முடியவில்லை. எல்லாம் கிடைத்தும் கூட அவரால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை என்று வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது. வரிசையாக சறுக்கி வந்த ஓ பன்னீர்செல்வம்.. இந்த தேர்தல் முடிவால் கொஞ்சம் நிமிர்ந்து அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications