ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு குட் நியூஸ் வருமா? மூத்த குடிமக்களுக்கு ரேஷனில் மறுபடியும் சிக்கல்?
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இந்நிலையில், மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, இவர்களுக்காகவே பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒருசில புகார்கள் மீண்டும் முளைக்க துவங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மிக குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனை தவிர, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரண நிதிகள் போன்றவைகள் உட்பட, அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், ரேஷன் அட்டை மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.. இதனாலும் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்.
ரேஷன் கார்டுகள் - குறைதீர் முகாம்
அதேபோல, ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை சொல்லுதல் போன்றவைகளையும், தமிழக அரசு உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறது.. இப்படி பொதுமக்களின் குறைகளையும், புகார்களையும், அதிருப்திகளையும் நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களை தமிழக அரசு ஒவ்வொரு மாதமும், மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, கோடைக்காலங்களில் சில விசேஷ அறிவிப்புகளும் வெளியாவது வழக்கமாகும்.. காரணம், கடந்த வருடம் மார்ச் மாதம், கோடைக்காலத்தின்போது, ரேஷன் கடைகளுக்கு வெயிலில் அலைக்கழிக்கப்பட கூடாது, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் மொத்தமாக வழங்கிவிட வேண்டும், யாரையும் கடைகளில் நீண்ட நேரம் காக்க வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
மூத்த குடிமக்கள் - உடல்நலம்
கடந்த மாதமும் ஒரு புதிய வசதி கொண்டுவரப்பட்டது.. அதாவது, மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
அவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை கடைக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அங்கீகார சான்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்ததால், இந்த சேவைக்கு, 'www.tnpds.gov.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை துவக்கியிருக்கிறது. இது மூத்த குடிமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஒப்புதல் படிவம் - மீண்டும் புகார்
எனினும், பல கடைகளில் படிவம் வழங்கி, ஒப்புதல் பெற்ற மூத்த குடிமக்களுக்கு, பொருட்கள் வழங்க மறுப்பதாக, புகார்கள் மீண்டும் எழுந்துள்ளன. தங்களின் சார்பில், வேறு நபரை அனுப்ப, உரிய முறையில் அங்கீகார படிவம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அந்த நபருக்கு பொருட்களும் வழங்கப்பட்டன.
இப்போது, கோடை வெயில் கொளுத்தி கொண்டிருக்கும்போது, "விண்ணப்பப் படிவத்தில் ஒப்புதல் பெற்றது ஏற்கப்படாது, இணையதளத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்றால் தான் பொருட்கள் வழங்கப்படும்" என்று கடை ஊழியர்கள் சொல்லி, பொருட்களையும் தர மறுக்கிறார்களாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லைாம்..
விரைவில் குட்நியூஸ் வருமா
வெப்சைட்டில் விண்ணப்பிப்பது தொடர்பாக, எந்த விபரமும் அதிகாரப்பூர்வமாக, அரசின் சார்பில் வெளியிடப்படாத நிலையில், எப்படி விண்ணப்பித்து, ஒப்புதல் பெற முடியும்? என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. எனவே, படிவம் வாயிலாக, ஒப்புதல் பெற்றவர்களுக்கு, தொடர்ந்து பொருட்களை தடையின்றி வழங்க, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த கோரிக்கை மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications