"சிதறி விடும்".. யாரை சொல்கிறார் தினகரன்.. அப்படீன்னா.. பாஜக கேம் பிளான் என்னவோ!
சசிகலாவை தேர்தலுக்கு பிறகு அழைத்து வருவோம் என டிடிவி தினகரன் சொல்கிறார்
சென்னை: டிடிவி தினகரன் ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னார்? சசிகலாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வர போகிறதா? என்ற சந்தேகங்கள் தமிழக அரசியல் களத்தை அசைத்து பார்த்து வருகின்றன.
தேர்தல் பிஸி நடந்து கொண்டிருக்கிறது.. வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.. இதில், தமிழக அரசியல் கட்சிகளிலேயே கடைசியாக கூட்டணி விவகாரத்தை முடித்தது அமமுகதான்... அந்த கட்சிகளை சேர்ந்த தினகரனும், பிரேமலதாவும் இல்லாத நிலையில், அக்கட்சியுடன் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது.
இதையடுத்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த தேர்தலில் அமமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது... சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அமமுக பக்கம் இருக்கின்றனர். அதனால், அதிமுகவை மீட்போம்.

சசிகலா
அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா சொல்லி இருப்பது அவரது விருப்பம்... ஆனால் தேர்தலுக்கு பிறகு சசிகலாவை திரும்பவும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துவேன்' என்றார். தினகரன் ஏன் இப்படி சொல்கிறார்? அப்படியானால் சசிகலா விலகுவதாக சொன்ன அறிக்கை முடிவில் மாற்றம் ஏற்படுமா? அல்லது அறிக்கை விடுவதற்கு முன்பேயே இதில் ஏதாவது அரசியல் கலந்து உள்ளதா? என்பன போன்ற சந்தேகங்களும் வெடித்து கிளம்பி இருக்கின்றன.

ஒன்றிணைவோம்
விலகல் அறிவிப்புக்கு முன்பு, சசிகலா என்ன முடிவில் இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது.. அப்போது, அது குறித்து அரசியல் தலைவர்கள் சிலரிடம் நாம் முன்பே கேட்டிருந்தோம்.. அதற்கு அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, "ஒன்றிணைவோம்" என்று அறிக்கை விட்டாலும், பேட்டி தந்தாலும், உண்மையிலேயே அவருக்கு அணிகள் இணைவதில் இப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை.. எப்படியும் அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று அவருக்கு தெரிந்துவிட்டது... அதனால், தனித்து நின்று தேர்தலை சந்திப்பது, அதன்மூலம் ஓரளவு வாக்கு வங்கியை பெறுவது என்பதுதான் திட்டமாக இருப்பதாக தெரிகிறது..

விமர்சனம்
இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுவிட்டால், பாஜகவின் குட்புக்கிலும் இடம் பெற்றுவிடலாம், அதற்கு பிறகு பாஜக தலைவர்கள் நினைத்தால், அமமுகவை அவர்களே இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குவார்கள் என்று சசிகலா நம்புகிறார்.. அதனால்தான், பாஜகவை கடிந்து கொள்வதுபோலவோ, விமர்சிப்பது போலவோ பேட்டிகள் எதையுமே தராமல் இருக்க முக்கிய காரணம்" என்றார்கள்.

இணைப்பு
இதற்கு பிறகுதான் சசிகலாவின் விலகல் அறிக்கை வெளியானது.. இதுகுறித்தும் நாம் அதே அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். அதற்கு அவர்கள், "அதிமுக - அமமுக இணைப்புக்காக சசிகலாவை வைத்து நாடகம் அரங்கேற்றப்படுவதாகவே தோன்றுகிறது.. அமமுக தனியாக போட்டியிட்டால், நிச்சயம் அதிமுக வாக்குகள்தான் அதிக அளவில் பிரியும். அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். அதனால்தான், சசிகலாவை விலகக் கோரி பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம்... இதற்காக பல வாக்குறுதிகளையும் டெல்லி மேலிடம் சசிகலாவுக்கு அளித்து, "இப்போதைக்கு நீங்கள் விலகுங்கள்" என்று டெல்லி மேலிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம், என்றும் கருத்து தெரிவித்தனர்.

சசிகலா
மேற்கூறியவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போதுதான், தினகரனின் நேற்றைய பேச்சில் உள்ள அர்த்தம் மெல்ல புரிய தொடங்க ஆரம்பித்துள்ளது.. இங்கு இன்னொன்றையும் யோசிக்க வேண்டி உள்ளது.. "தேர்தலுக்கு பிறகு சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர முயற்சி" என்பதைகூட, ஓட்டுக்காக தினகரன் சொன்ன பசப்பு வார்த்தைகளாக இருக்குமோ என்ற கோணத்திலும் அணுக வேண்டி உள்ளது.

கேம்பிளான்
இது எல்லாவற்றிற்கும் மேலாக பாஜகவை தவிர்த்துவிட்டு எதையுமே யோசிக்கவும் முடியவில்லை.. எப்போதுமே தேர்தல் சமயத்தில்விட, தேர்தலுக்கு பிந்தைய அரசியலில்தான் பாஜகவின் ஆளுமை அதிகம் வெளிப்படும்.. அதிலும் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தபிறகுதான், கூட்டணிகளுக்கே தண்ணி காட்டும் போக்கை பாஜக மேற்கொள்ளும் என்பது சமீபத்திய தேசிய அரசியலாகும்... அந்த வகையில் சசிகலாவின் அரசியலும் அப்படியே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தினகரன் ஏன் அப்படி சொன்னார்? பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications