தேர்தல் முடிந்ததும், தமிழக அரசுக்கு ஆபத்தா? புயலை கிளப்பிய சர்வே
சென்னை: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் தமிழக அரசு கலையும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபைக்கு ஒரு மினி தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஆம்.. மொத்தம் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இது மினி சட்டசபை தேர்தல் என்றே அழைக்கப்படுகிறது.
மொத்தம் 22 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ள நிலையில், இடைத் தேர்தல் நடைபெறுவது 18 தொகுதிகளுக்கு மட்டும்.

லயோலா முன்னாள் மாணவர்கள்
தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், நேற்று, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு ரிசல்ட் வெளியானது. அதில் ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கருத்துக் கணிப்பு, உண்மையாக நடந்தால், அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் கணிப்பு அவை.

2 தொகுதிகள்
18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி, 11 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதேநேரம், அதிமுக கூட்டணி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளை அமமுக வெல்லக்கூடும். அதாவது அதிமுகவைவிடவும் அமமுக அதிக தொகுதிகளை வெல்லும். இவ்வாறு ஒரு முக்கிய தகவலை அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

18 எம்எல்ஏக்கள்
2016ம் ஆண்டு சட்டசபை, தேர்தலில் அதிமுக 135 தொகுதிகளை வென்றது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பலவாக உடைந்தது. சசிகலா-டிடிவி தினகரன், குழுவிற்கு ஆதரவாக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

4 தொகுதிகளாவது வெல்ல வேண்டும்
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ், சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ், நீதிமன்ற தீர்ப்பால் பதவி பறிப்புக்கு உள்ளானார் ஒசூர் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சராக இருந்தவருமான பாலகிருஷ்ணா ரெட்டி. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 114ஆக குறைந்துவிட்டது. சட்டசபை இடைத் தேர்தலில் குறைந்தது 4 தொகுதிகளையாவது அதிமுக வென்றால் அதன் பலம் 118ஆக உயரும்.

116 எம்எல்ஏக்கள் பலம்
இப்போதுள்ள சூழ்நிலையில், 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்பதால், சட்டசபையின் மொத்த பலம் 230ஆக உள்ளது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க பாதிக்கும் மேல் எம்எல்ஏக்கள் பலம் தேவை என்பதால், அதிமுக ஆட்சியை தொடர 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. 234 தொகுதிகள் என்ற அடிப்படையில் பார்த்தால், 118 எம்எல்ஏக்கள் பலம் தேவைப்படும். ஆனால் 4 தொகுதிகள் காலியாக உள்ளதால் 116 எம்எல்ஏக்கள் பலம் மட்டுமே இப்போதைக்கு போதுமானது.

ஆட்சி மீது தொங்கும் கத்தி
லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்புப்படி அதிமுகவுக்கு 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இது உண்மையாகி 116 எம்எல்ஏக்கள் பலத்தை அதிமுக பெற்றாலும், அது கத்தி மேல் நடப்பதை போலத்தான். திமுகவோ, அமமுகவோ ஏதாவது ஒரு எம்எல்ஏவை இழுத்தாலும் மீண்டும் சிக்கல்தான். அதிமுகவை பொறுத்தளவில் குறைந்தது 8 தொகுதிகளையாவது வென்றால்தான் நிம்மதியாக ஆட்சியை தொடர முடியும் என்ற சூழல் உள்ளது.












Click it and Unblock the Notifications