கமல் பேச்சை வைத்து மோதலை ஏற்படுத்த சதியா?
கமலின் சர்ச்சை பேச்சை வைத்து மோதலை ஏற்படுத்த சதி நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: கமல் பேசிய பேச்சை வைத்து மோதலை ஏற்படுத்த சிலர் சதி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பால்தான் அவர் தொடர்ந்து தனது பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் கூட இந்து தீவிரவாதம் குறித்து பலர் பேசியுள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் வெடிக்காத சர்ச்சை இப்போது வெடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
கமல் பொத்தாம் பொதுவாக இந்து தீவிரவாதிகள் என்று கூறவில்லை. மாறாக தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைத்தான் அவர் பெயர் குறிப்பிட்டு, கோட்சேவை மட்டும் குறித்து பேசினார். அதுவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீ 1000 கொடுத்தால் நான் 2000.. நீங்க 2000 கொடுத்தா நாங்க 4000.. அதிர வைக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல்
எதிர்ப்புகள்
கமல் பேச்சை பெரிதாக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிராக வெடித்து வரும் குரல்கள், எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது இதை காரணமாக வைத்து மோதலை உருவாக்கி, நான்கு தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்க யாரேனும் சதி செய்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.
இடைத்தேர்தல்
இதன் காரணமாகவே கமல்ஹாசனின் பிரச்சாரக் கூட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கூட்டம் நடத்தி அதில் யாரேனும் விஷமிகள் புகுந்து மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் விரும்பத்தகாத சம்பவங்களை ஏற்படுத்தி இதைக் காரணமாக வைத்து இடைத் தேர்தலை நடத்த முடியாத சூழலை உருவாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எதிர்மறை விளைவுகள்
இதன் பொருட்டே திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் கூட கருத்து கூறாமல் இருப்பதாகவும் ஊகிக்கப்படுகிறது. காரணம் முக்கிய கட்சியான திமுக ஏதாவது கருத்து கூறப் போக அது எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை நான்கு தொகுதி இடைத் தேர்தலில் ஏற்படுத்தலாம் என்பதால்தான் திமுக அமைதி காப்பதாக சொல்கிறார்கள். காரணம் திமுகவுக்கு இந்த 4 தொகுதிகளும் வெல்வது முக்கியம்.
ஆதாயம்
கமல்ஹாசனும் கூட இந்த விவகாரத்தால் இடைத் தேர்தல் தள்ளிப் போவதும் தேவையில்லாத சர்ச்சைகள் எழுவதும் விரும்பவில்லை. இதனால்தான் அவரும் வன்முறை மூண்டு எதிர் தரப்பினருக்கு ஆதாயம் கிடைத்து விடாத வகையில் கூட்டங்களை ரத்து செய்வதாக கூறப்படுகிறது.
கொந்தளிப்பு
இதற்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பல பாஜக தலைவர்கள் பச்சையாகவே சொல்லியபோது எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தாத சிலர் இப்போது தேசத்தந்தையைக் கொன்றவரை இந்து தீவிரவாதி என்று கமல் சொன்னதற்காக கடுமையாக கொந்தளிப்பது நிச்சயம் தேர்தல் காலம் என்பதால்தான் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆதாயமா?
அதேசமயம், தலைவர்கள் என்பவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். யாராக இருந்தாலும் சரி, மதத்தை குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசுவது நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. மதத்தை வைத்து குளிர் காய நினைப்பதோ அல்லது மதத்தை இழிவுபடுத்திப் பேசி ஆதாயம் அடைய முயற்சிப்பதோ நிச்சயம் மனிதத்துவம் நிறைந்தவர்களால் ஏற்க முடியாத விஷயம் என்பதை எல்லா அரசியல் கட்சியினருமே மனதில் கொண்டால் சர்ச்சைகளுக்கு இடமே கிடையாது.