கொலுசு சத்தம் கவனத்தை சிதறடிக்குமா.. ஆச்சரியமா இருக்கே!
கொலுசு சத்தத்தினால் மாணவர்களின் கவனம் சிதறடிக்கப்படுமா?
சென்னை: கொலுசு சத்தத்தினால் கவனம் சிதறுமா? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கூற்று எந்த அளவுக்கு நியாயமானது?
நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அளித்த ஒரு பேட்டியில், "மாணவிகள் கொலுசு அணிந்து செல்லும்போது மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும், தெரிவித்தார். மேலும் மாணவிகள் பூ சூடிக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
நல்ல விஷயம்தான்... மாணவர்களின் கவனம் சிதறாமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும் என்ற கருத்துக்கு மாற்று கருத்து இருக்க முடியாதுதான்.

எண்ணிக்கை குறைவு
ஆனால் கொலுசு என்பது காலங்காலமாக நம் பெண்கள் அணிந்து வரக்கூடியது. குறிப்பாக இளம் பெண்கள், பெண் குழந்தைகள்தான் அணிந்து வருகிறார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் இந்த கொலுசையும் நம் பெண்கள் அணிவது கிடையாது. அதுவும் இல்லாமல் இப்போது கொலுசு போடும் மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

குட்டை பாவாடைகள்
காலங்காலமாக கொலுசு போட்டுதான் நம் வீட்டு பெண்கள் படித்து முடித்து வெளியே வந்தார்கள். அப்போதெல்லாம் கவனம் யாருக்கும் சிதறவில்லையா? கவனம் சிதற கொலுசுதான் முக்கிய காரணமாக உள்ளதா? எத்தனையோ தனியார் பள்ளிகளில் யூனிபார்ம் என்ற பெயரில் குட்டை பாவாடையுடன் மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கொலுசு அதைவிட எந்தவிதத்தில் கவனத்தை சிதறடிக்க முடியும்? என தெரியவில்லை.

ஏற்க முடியவில்லை
இந்த வயசில் போடாமல் எந்த வயசில் கொலுசை அணிந்து கொள்வது என்றும் தெரியவில்லை. தமிழ் இன கலாச்சாரத்தில் ஒன்றி போனது இந்த கொலுசு. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருக்கும் வேளையில், இதனால் படிப்பின் கவனம் சிதறும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறந்த அமைச்சர்
உண்மையிலேயே தற்போதைய அமைச்சர்களிலேயே பள்ளிக்கல்வித்துறை தான் முன்னணியில் உள்ளது. அந்த அளவுக்கு அமைச்சர் செங்கோட்டையனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. சர்ச்சை, புகார், பரபரப்பு, கண்டனம் என எந்தவித விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் இருப்பவர்களில் முதன்மையானவராக செங்கோட்டையன் இப்போது விளங்கி வருகிறார் என்பதையும் மறுக்கவே முடியாது. ஆனால் இந்த கொலுசு அறிவிப்பு மட்டும்தான் கொஞ்சம் இடிக்கிறது.

6-வது விரல்
கையிலே 6-வது விரல் போல வைத்திருக்கும் செல்போனிலும், இணையத்திலும் பரவிக் கிடக்கும் ஆபாசம், விரசத்தினால் வரும் கவன சிதறலைவிட கொலுசு ஒன்னும் அப்படி கேடு தந்துவிடாது என்பதே உண்மை. பள்ளி நேரத்தை தவிர மற்ற இடங்களில் கொலுசு சத்தத்தை மாணவன் கேட்டால், அப்போது என்னாகும் நிலைமை? பூ வைத்தால் மட்டும் கவனம் போகாதா? கவனம் சிதறும், சிதற வேண்டும் என்று நினைத்தால் சிதறித்தான் போகும். கவனம் சிதறவே கூடாது என்ற மனோதிடம் இருந்தால் எத்தகைய மாணவராக இருந்தாலும் அது ஒருக்காலும் போகவே போகாது.

அம்மா... தங்கை
வீடுகளில் அம்மா, அக்கா, தங்கை, அத்தை, சித்தி என உறவுகள் கொலுசுடன் நடமாடும்போது அதைக் கேட்டு திசை திரும்பாத மாணவர்கள், பள்ளிகளிலும் சக மாணவிகளிடம் அதுபோலத்தானே இருப்பார்கள்?? இருக்க முடியும்.. எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம். அது சரியாக இருந்தால், கொலுசு என்ன... குண்டு சத்தம் கேட்டால் கூட திசை திரும்ப மாட்டார்கள்.












Click it and Unblock the Notifications