12ம் தேதி தீபாவளி.. இந்த மாதம் முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா
சென்னை: கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களில் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எல்லா மாதமும் 15ம் தேதி வைக்கப்படும். ஆனால் கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதி வைக்கப்பட்டது.

முதல் மாத தொகை: முதல் மாதமும் பலருக்கும் முதல் நாளே.. அதாவது 14ம் தேதியே பணம் வரவு வைக்கப்பட்டது. இதற்காக பெண்களிடம் ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.
இவர்கள் எல்லோருக்கும் வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எல்லோருக்கும் பணம் அனுப்பப்பட்டது. 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர்.
முன்கூட்டியே தொகை: தற்போது வரை இந்த திட்டத்திற்கு 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டாம் மாத தொகை தற்போது மீண்டும் அனுப்பப்பட உள்ளது.
அதன்படி கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15ம் தேதி மீண்டும் இந்த தொகை வழங்கப்பட வேண்டும். எல்லா மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்னும் 13ம் நாட்களில் இந்த பணம் அனுப்பப்படும். ஆனால் இந்த முறை தீபாவளி 12ம் தேதி வருகிறது. இதை மனதில் வைத்து பெண்களின் தேவையை கருதி 10 - 9 தேதிகளில் பணம் போடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் பின்வருமாறு மேல்முறையீடு செய்யலாம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
உங்களிடம் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும்.
திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் பணம் கிடைக்காது.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.












Click it and Unblock the Notifications