‛எஸ்சி' என்பதால் ஸ்டாலினை சந்திக்க விடமாட்டீர்களா? அறிவாலயத்தில் திமுக மாஜி எம்எல்ஏ வாக்குவாதம்
சென்னை: ‛‛நான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கீர்களா? என்று சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவின் தலைமை அலுவலகமாக சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு தான் திமுகவின் கட்சி சார்ந்த பல்வேறு கூட்டங்கள் முதல்வரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும்.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இன்று அண்ணா அறிவாலயத்துக்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் வந்திருந்தார்.
முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் அண்ணா அறிவாலயத்தின் வாயிலில் நின்றவர்கள் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமான ஆடலரசன், ‛‛பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது பையில் இருந்த திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டையை தூக்கி தரையில் வீசியெறிந்து வெளியே சென்றார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆடலரசனை சமாதானம் செய்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் ஆடலரசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். முன்னதாக பட்டியலினத்தை சேர்ந்தவன் என்பதால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி கேட்டு ஆடலரசன் வாக்குவாதம் செய்தது அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்குவாதம் செய்த ஆடலரன் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர் மொத்தம் 72,127 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் உமாதேவி 58,877 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆடலரசன் விரும்பினார். அதற்கு காய் நகர்த்தினார். ஆனால் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. தனது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த தொகுதி வழங்கப்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க. மாரிமுத்து வேட்பாளராக போட்டியிட்டு 97,092 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சி சுரேஷ் குமாரை (பெற்ற வாக்குகள் 67,024) வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications