வெற்றி பெற்றவர்கள் எங்கேயும் போய்டாதீங்க.. நேரா பனையூருக்குதான் வரணும்.. விஜய் எச்சரிக்கை
சென்னை: தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்.. வேறு எங்கும் செல்ல கூடாது.. உங்களுக்காக நான் காத்திருப்பேன் என விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நமக்கு சாதகமான முடிவுகள் தான் வரும். நம்பிக்கையுடன் காத்திருங்கள். நாம் எல்லாரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாகவும் சென்னை பனையூரில் நடந்த வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியாகின்றன. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், இன்று கட்சியின் பனையூர் அலுவலகத்தில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பனையூரில் ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனையின் போது சில முக்கிய கருத்துக்களை விஜய் சொல்லியிருக்கிறார். "நடந்து முடிந்த தேர்தலில் ஒருவேளை தவெக வெற்றி பெற்றால், வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் உடனே பனையூருக்கு வந்துவிடவேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது" என்று விஜய் எச்சரிக்கையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லாரும் நம்பிக்கையுடம் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருங்கள். எந்த ஒரு தவறான முடிவுகளும் வராது. நமக்கு சாதகமான முடிவுகள் தான் வரும். நம்பிக்கையுடன் காத்திருங்கள். நாம் எல்லாரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். பிரசாரம் முதல் வாக்குப்பதிவு வரை என அனைத்து நாட்களிலும் கட்சி நிர்வாகிகள் முதல் வேட்பாளர்கள் வரை பலரும் சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள்.
நேரா பனையூர் தான் வர வேண்டும்
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நாளில் காலை 6 மணி முதல் வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது. வேட்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள் அங்கேயே இருந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மானிட்டர் செய்ய வேண்டும். வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள் நேரடியாக பனையூர் வர வேண்டும். வெற்றி சான்றிதழை பெற்றதும் பனையூர் தான் வர வேண்டும். வேறு எங்கும் சென்றுவிட கூடாது. நான் உங்களுக்காக காத்திருப்பேன்" என்று விஜய் கூறியுள்ளார்.
விஜய் பேசியது என்ன?
ஆர்கே நகர் தொகுதி வேட்பாளர் மரிய வில்சன் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "மக்களை எப்படி சந்தித்தீங்க.. மக்கள் என்னவெல்லாம் சொன்னாங்க.. எப்படி இருந்துச்சு இந்த தேர்தல் அனுபவம்.. என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். எக்ஸிட் போல், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிபு எல்லாத்தையும்விட மக்கள் தீர்ப்பு தான் சரியானது. நாங்க நேரடியாக மக்களிடம் பேசியிருக்கோம். ரொம்ப நம்பிக்கையோட இருக்கோம்..
காலையில் 6 மணிக்கு எல்லாம் ஓட்டுப்பதிவு மையங்களில் இருக்க வேண்டும். யாரும் ஒரு இஞ்ச் கூட நகர கூடாது. அங்கே இருந்து புல்லா மானிட்டர் பண்ண வேண்டும் என சொல்லியிருக்கிறார்" என மரிய வில்சன் கூறினார்..












Click it and Unblock the Notifications