அம்பத்தூரில் வாங்கி போட்ட நிலம் அபேஸ்.. கணவருடன் கம்பி எண்ணும் சென்னை போலீஸ் ஏட்டு தேவி
சென்னை: சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பெண் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஏட்டு தேவி என்பவர் அம்பத்தூரில் போலி ஆவணம் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சென்னை நொளம்பூர் போலீசார் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலம், வீட்டு மனை வாங்கி போட்டவர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வது அதிகமாக நடக்கிறது. அடிக்கடி ஆவடி காவல் நிலையத்திலும், பூந்தமல்லி காவல் நிலையத்திலும், செங்கல்பட்டு, தாம்பரம் சுற்றுவட்டார காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நில மோசடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக வயதான பெண்கள் பெயரில் உள்ள நிலங்கள், வீட்டுமனைகள் மோசடி செய்யப்படுகின்றன. அதேபோல் வெளிநாட்டில் உள்ளவர்களின் நிலம். உள்ளூரில் வெளியில் அதிகம் சென்றுவர முடியாத முதியவர்களின் நிலங்களை குறிவைத்து பக்காவாக ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு செய்கிறார்கள். இப்படி போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தால் அவர்களிடம் இருந்து நிலம் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று தெரிந்தும் மோசடி செய்கிறவர்கள் துணிந்து தான் செயல்படுகிறார்கள். இப்படி கடந்த சில வருடங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. போலி ஆவணம் மூலம் நிலம் அல்லது வீட்டுமனையை இழந்தவர்கள் நிறைய அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும்.
சில நேரங்களில் போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து நிலத்தை அபகரித்திருந்தால், அதுபோலி வாரிசு சான்றிதழ் என்று நிரூபிக்கவே நிறைய போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும். அதேபோல் உறவினர்கள் பலருக்கும் சொந்தமான நிலத்தை ஒருவரே வாரிசு சான்றிதழ் வாங்கி பட்டாவும் வாங்கி மோசடி செய்வதும் நடக்கிறது.. அப்படி மோசடி நடக்கும் போது சட்டப்படி நிவாரணம் பெற எல்லாருமே வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும். அத்துடன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். எனவே அடிக்கடி உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யுங்கள். அதேபோல் வாங்கி போட்ட நிலத்தை அவ்வப்போது போய் பார்வையிடுங்கள். ஏனெனில் அம்பத்தூரில் நடந்த சம்பவம் அப்படி இருக்கிறது.
சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தேவி. சென்னையை அடுத்த அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் போலி ஆவணம் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மாலதி என்ற பெண் சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நில மோசடியில் பெண் ஏட்டு தேவியும், அவரது கணவர் ரகுவும் சேர்ந்து தன்னை மிரட்டியதாகவும், இவர்கள்தான் முக்கிய குற்றவாளிகள் என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை தொடர்ந்து, நொளம்பூர் குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் ஏட்டு தேவி மற்றும் அவரது கணவர் ரகுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications