சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி தற்கொலை.. விடுதி அறைக்குள் சடலம் கண்டெடுப்பு
சென்னை: மெட்ராஸ் ஐஐடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஐஐடியில் இறுதியாண்டு கப்பல் கட்டுமான துறையில் கல்வி பயின்று கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த சாகுல் கோர்னாத் என்ற 23 வயது மாணவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற 25 வயது ஆராய்ச்சி மாணவி ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உலோகவியல் (metallurgy) துறையில் பிஹெச்டி பயின்று வந்தவர் ரஞ்சனா குமாரி. 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அவர் சேர்ந்துள்ளார். கடந்த இரு தினங்களாக ரஞ்சனா குமாரியின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் போனை எடுக்காத காரணத்தினால் அவர்கள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் அறைக்கதவை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சனா குமாரி சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக 2016 ஆம் ஆண்டு, கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர், ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதே நாளில் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்த பேராசிரியர் மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து மர்மமான முறையில் நடைபெறும், தற்கொலை சம்பவங்கள், சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications