மெரினா கடற்கரையில் தலையில்லாமல் பெண் உடல்.. ஜெயலலிதா சமாதிக்கு பின்புறம் அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பின்புறம் கல்குட்டை என்ற பகுதி இருக்கிறது. இங்கு இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கரை ஒதுங்கி உள்ளது. அந்த பெண் உடல் தலையில்லாமல் கடலில் வீசப்பட்டிருந்தது. இதுபற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையை பொறுத்தவரை 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும்வந்து செல்கிறார்கள். இதில் அண்ணா சதுக்கம் பகுதியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கள் உள்ளன. நினைவிடங்களாக உள்ள இந்த இடத்திற்கு பலரும் வந்து செல்வார்கள். இது அரசியல் அடையாளமாக மட்டுமின்றி உலகின் மிக பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது. அதேநேரம் அண்ணா சதுக்கம் பகுதி கடற்கரையின் பின்பக்கம் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி பின்புறம் உள்ள பகுதிக்கு கல்குட்டை என்று பெயர். இங்கு நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் கைப்பற்றி உடலில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. 2 கால்களின் பாதம் பகுதியும், துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. சுடிதார் அணியப்பட்டிருந்தது. ஆனால் அரைநிர்வாண கோலத்தில் உள்ளாடை மட்டுமே இருந்தது. தலை துண்டிக்கப்பட்டதால் அந்த பெண்ணின் வயதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
தலையையும், கால்களையும் துண்டித்து அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து, யாரோ மர்ம நபர்கள் கடலில் வீசியிருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். மீட்கப்பட்ட பெண்ணின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவிலேயே அந்த பெண்ணின் வயது மற்றும் உயிரிழந்த விதம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் காணாமல்போன பெண்களின் பட்டியலை சேகரித்து, அதன்மூலம் உயிரிழந்த பெண் யார்? என்ற விவரங்களை சேகரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் காணாமல் போன தலை கிடைத்தால் தான் இவர் யார் என்பதும் முழு விவரமும் தெரியவரும்.












Click it and Unblock the Notifications