சீட்டு கேட்டு ஓபிஎஸ் வீட்டுக்கு சென்ற மகளிரணியினர்.. குடுமியை பிடித்து இழுத்து சண்டையிட்டதால் பரபரப்பு!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வந்த இரு வேறு பகுதியை சேர்ந்த மகளிரணியினர் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி வெளியாகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீட்
இந்த நிலையில் தேர்தல் போட்டியிட கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலை பொருத்தமட்டில் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதால் நிர்வாகிகள் சீட் கேட்டு போட்டி போடுகிறார்கள். அந்த வகையில் அதிமுக மகளிரணியினர் இரு வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் அதிமுகவில் விருப்பமனுக்களை தாக்கல் செய்து யாருக்கு கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.

மகளிர் அணியினர்
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் கனகலட்சுமி (46) நேற்று மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் ஷகிலா, மதுரவாயலைச் சேர்ந்த அதிமுக மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோரும் வந்துள்ளனர்.

ஆத்திரமடைந்த இரு தரப்பு
இவர்களுக்குள் யார் முதலில் போவது என்ற போட்டியில் ஷகிலா, மஞ்சுளா தரப்பினர் கனகலட்சுமி தரப்பை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முடியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

படுகொலைகள்
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்தவர்களும் ஏற்கெனவே ஓபிஎஸ்ஸை பார்க்க வந்தவர்களும் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கனகலட்சுமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் மஞ்சுளா, ஷகிலா உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் அறிவித்தார்கள், ஒரு பக்கம் படுகொலைகள் நிகழ்கின்றன. மறுபக்கம் இது போன்று கோஷ்டி மோதல்களும் ஏற்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications