"உலகிலேயே பெரும் பணக்கார நாய் இதுதான்".. மொத்த சொத்து மதிப்பு ரூ.3,358 கோடியாம்! சுவாரசியம்
சென்னை: உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரர் யார் என்று நம்மிடம் கேட்டால் நாம் உடனடியாக எலான் மஸ்க் என்று சொல்லிவிடுவோம். ஆனால் உலகிலேயே பணக்கார நாய் எது? அந்த நாய் எங்கு உள்ளது? என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா? இது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். வாங்க இந்த செய்தியில் அதுபற்றி பார்ப்போம்.
உலக பணக்காரர், ஆசிய பணக்காரர் என்று ஆண்டுதோறும் பெரும் பணக்காரர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டும் அப்படியே தான் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் ரூ.1 கோடி கிடைத்தாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவேன் என்று பலரும் கூறி வருவதை நாம் கேட்டு இருப்போம். ஆனால் உலகிலேயே பெரும் பணக்கார நாயாக ஒன்று உள்ளது. அந்த நாயின் சொத்த மதிப்பு ரூ.3,358 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை தான்.
இந்த நாய் ஜெர்மனியில் உள்ளது. ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த இந்த நாயின் பெயர் குந்தர் VI. இந்த நாய் தான் உலகிலேயே பெரும் பணக்கார நாயாக உள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ.3,358 கோடியாக இருக்கிறது. இந்த நாய்க்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது? என்று பார்த்தால் அதன் பின்னணியில் முக்கிய தகவல் ஒன்று உள்ளது.
அதாவது ஜெர்மனியில் கவுண்டஸ் கோர்லோட்டர் லிபென்ஸ்டின் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் மிகப்பெரிய செல்வந்தர். இவருக்கு நிலம், வீடு, பங்களா, சொகுசு கார்கள் என்று ஏராளமான சொத்துகள் இருந்தன. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த கவுண்டஸ் என்ற பெண்ணுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. அதேபோல் நெருங்கிய உறவினர்களும் இல்லை.
இதனால் குழந்தை, உறவினர்கள் இல்லாத ஏக்கத்தில் கவுண்டஸ் செல்லப்பிராணியாக ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாயை வளர்க்க தொடங்கினார். அந்த நாய்க்கு அவர் குந்தர் III என பெயர் சூட்டினார். இந்நிலையில் கவுண்டஸ் தனது கடைசி காலத்தில் தனது சொத்துகள் முழுவதையும் குந்தர் III என்ற நாயின் பெயரில் எழுதி வைத்துவிட்டு காலமானார்.
மேலும் இந்த குந்தர் III என்ற நாயின் சொத்துகளை கவனிக்க தனியாக அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை தான் குந்தர் III நாயின் சொத்து விபரங்களை கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த நாயின் பணத்தை முதலீடு செய்து தொடர்ந்து சொத்து மதிப்பை அதிகரிக்கும் பணியில் இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
இந்த குந்தர் III மறைந்த பிறகு அதன் அடுத்த வாரிசுகளுக்கு பல ஆயிரம் கோடி சொத்து என்பது மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் குந்தர் III-ன் குடும்ப வாரிசாக தற்போது குந்தர் VI என்ற நாய் உள்ளது. இந்த நாயின் பெயரில் தற்போது ரூ.3,358 கோடி சொத்து உள்ளது. இதனால் இந்த குந்தர் VI நாய் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.
இந்த நாய்க்கு என்று பெரிய பங்களா, சொகுசு படகு, சொகுசு கார் உள்ளிட்டவை உள்ளன. இந்த செய்தி தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாள் முழுவதும் உழைத்தும் கூட சம்பளத்தை மிச்சம் பிடிக்க முடியாமல் தவிக்கும் பல கோடி பேருக்கு மத்தியில் குந்தர் VI நாய்க்கு ரூ.3,358 கோடி சொத்து இருக்கும் தகவல் தற்போது வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அனைவரும் அம்மாடியோவ் என்று வாயை பிளக்கின்றனர். மேலும் ‛குந்தர் VI’ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‛குந்தர் மில்லியன்கள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது நெட்பிளிக்ஸில் உள்ளது.












Click it and Unblock the Notifications