உதயநிதிக்கு ஸ்கெட்ச் போடும் அமலாக்கத்துறை! எஸ்கேப்பான ரத்தீஷ்! யார் அந்த தம்பி! அதிமுக எடுத்த ஆயுதம்
சென்னை: டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை தமிழகத்தில் இரு முறை சோதனை நடத்தியுள்ளது. இரண்டாவது சோதனையில் தொழிலதிபர் ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் அதிமுகவினர் யார் அந்த தம்பி? என தமிழக முழுவதும் போஸ்டர் அடித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுவதாகவும் மதுபான ஆலைகள், டாஸ்மாக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது அதிகாரிகளை துன்புறுத்தியதாகவும், சோதனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அதிகாரிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயல்வது ஏன் என கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணைக்கு தடை இல்லை எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரத்தீஷ், பராசக்தி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடைபெற்றது. விசாகன் ஐஏஎஸ் வீட்டில் அவரிடமும், அவரது மனைவியிடமும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னை எம்ஆர்சி நகரில் வசிக்கும் ரத்தீஷ் என்பவர் உடன் விசாகன் ஐஏஎஸ் தொடர்பில் இருந்ததாகவும், எந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென ரத்தீஷ் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில வாட்ஸப் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியானது. மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருக்கிறார். மேலும் ரத்தீஷும் தற்போது தலைமுறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் ரத்தீஷ் திமுக இளைஞரணி தலைவரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ரத்தீஷ் யார்? திமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி? டாஸ்மாக் மேலாண் இயக்குனருக்கு மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றவரா? என பல கேள்விகளை அதிமுக எழுப்புகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யார் அந்த தம்பி? என்ற பெயரில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அதிமுக இதனை மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக பார்க்கிறது. தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது யார் அந்த தம்பி? என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications