சமூக சேவகர் ஸ்டேன் சாமியை கைது செய்த என்.ஐ.ஏ.. மதுரையில் கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: சமூக சேவகர் ஸ்டேன் சாமியின் கைதை கண்டித்து, இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு சேவை செய்துவந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த அக்டோபர் 8ம் தேதி அதிரடியாக கைது செய்தது.
2 சீனியர்கள்.. ஸ்டார் பேச்சாளர் லிஸ்டிலே பெயர் இல்லை.. புறக்கணித்த பாஜக.. என்ன நடக்கிறது பீகாரில்?
இது இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக சேவகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2018இல் பீமா கோரேகான் வழக்கிலும் மாவோயிஸ்டுகளுடனும் இவருக்குத் தொடர்பு உள்ளது என்ற பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவரது கைதினைக் கண்டித்து நேற்று (12ஆம் தேதி) நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் செயின்ட் மேரிஸ் முன்பாக மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு அய்டியாஸ் இயக்குநர் பால்மைக் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சி.சே.இராஜன், அ.சந்தனம், வர்கீஸ் ஆண்டனி முன்னிலை வகித்தனர். 83 வயது ஸ்டேன் சாமி மிகச்சிறந்த சமூகசேவகர். ஆதிவாசி, தலித் உரிமைகளுக்காக கடந்த 50 ஆண்டுகளாக பணி செய்தவர். அவரது பணியை பாராட்ட வேண்டிய அரசு அவரை கைது செய்து அவமதித்துள்ளது என்று தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வர் தியான்சந் கார், மக்கள் கண்காணிப்பகம் கணேசன், சோக்கோ அறக்கட்டளை மகபூப் பாட்சா, சமம் குடிமக்கள் இயக்கம் சண்முகவேலு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன், ம.தி.மு.க. தொழிற்சங்க தலைவர் மகபூப் ஜான் நாட்டை காப்போம் அமைப்பு ஜூபைதா பானு, மதுரை துறவியர் பேரவை பாத்திமா கல்லூரி முன்னாள் முதல்வர் பாத்திமா ஆண்டணி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஸ்டேன் சாமியை விடுதலை செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
அருட் தந்தை. ஸ்டான் சுவாமி மற்றும் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 15 மனித உரிமை ஆர்வலர்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என இதில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தமிழக ஆயர் பேரவை பேராயர்.ஆன்றனி பாப்பு சாமி அறிக்கையும் வாசிக்கப்பட்டது. தூயமரியன்னை பள்ளி தாளாளர் அருட்பணி ஸ்டீபன் நன்றி கூறினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.