இளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா!
சென்னை: கொரோனாவைரஸ் தாக்கம் குறித்து இளம் பிள்ளைகளிடம் போதிய அளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவர்களுக்குள் இருக்கும் அச்சமற்ற நிலையால் பெரும் விபரீதம் ஏற்படுமா என்ற கவலையும், பயமும் நமக்கு ஏற்படுகிறது.
Recommended Video
மத்திய அரசும், மாநில அரசும் கொரோனா நோய் தீவிரம் குறித்து பல்வேறு அறிக்கைகளை மக்களுக்கு கொடுத்து எச்சரித்து வருகிறார்கள். கொரோனாவினால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்று மருத்துவர்களும் தொலைக்காட்சி வாயிலாகவும், வீடியோக்கள் மூலமும் சொல்லி வருகிறார்கள்.

உலக நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவிற்கு பலியாவதும் செய்திகளில் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இளசுகள் இந்த நாட்டு வருங்கால தலைமுறைகள்.....எதிர் காலத் தூண்கள்...இதை எதையும் கருத்தில் கொள்வதில்லை. அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, வீட்டில் இருங்கள் என்று சொல்கிறது.
ஆனால் அவர்களோ கிரிக்கெட் விளையாடுவது, இரு சக்கர வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேருடன் பவனி வருவது என வீட்டில் இருக்காமல் சுற்றி திரிகிறார்கள். தொலைக்காட்சிகளிலும், வாட்ஸ் அப் வீடியோக்களிலும் காவல்துறையினரால் அவர்கள் அடிவாங்கி தலைதெரிக்க ஓடுவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.
இதற்கு காரணம் சுயகட்டுப்பாடு அறவே இல்லாதது தான் காரணம். மேலும் இளசுகள் டிக்டாக், சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் உரையாடுவது ஆகிய செயல்பாடுல்களால் உலக நடப்புகளில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். துணிச்சலும், தைரியமும் இருக்கவேண்டியது தான். ஆனால் அது எப்போது, எந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தணை வேண்டும் அல்லவா.
தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள்.. ஆனால் கொடுர கொரோனா நோய், நீங்கள் வெளியில் சுற்றினால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்களிடம் தொடர்பில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான், இளையோர் தாங்கள் கற்றதையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூறியவற்றை நினைவுகூர்ந்து சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
இந்த சமூகத்திற்கு நீங்கள் ஆற்றும் பணி நிறைய உள்ளது. இப்போது உங்களது பணி, உங்கள் குடும்பத்திற்கும், நமது அரசாங்கத்திற்கும் செய்ய வேண்டியது நீங்கள் வீட்டில் இருப்பது மட்டும் தான்.
சோ. கோமதி ஜெயம்
பட்டதாரி ஆசிரியர்
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி
காரைக்குடி












Click it and Unblock the Notifications