பிரபல யூடியூபர் அதிமுக நிர்வாகி அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு தரணும்.. உறுதி செய்த ஐகோர்ட்
சென்னை: அவதூறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு களங்கம் ஏற்படுத்தியதாக பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அதிமுக செய்தித் தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தொடர்ந்த வழக்கில், 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த திருநங்கையான அப்சரா ரெட்டி அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும், பிரபலமான மாடலாகவும் இருக்கிறார். முன்னதாக டிவி நிகழ்ச்சி பங்கேற்று வந்த அவர், வெளியில் தெரிய ஆரம்பித்தது ஜெயா டிவியின் டாக்-ஷோவில். அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன அப்சரா.. கொஞ்ச நாளிலேயே ஜெயலலிதா முன்னணியில் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது தினகரன் அணியில் இருந்த அவர், காங்கிரசுக்கு சென்றார். அங்கு மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் ஆக இருந்தார். அதன்பின்னர் பாஜகவில் இணைந்த அவர், அதன்பின்னர் அதிமுகவில் இணைந்தார், அப்போது அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.
இந்நிலயில் சென்னையில் மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர் அப்சராவை அவதூறாக பேசி 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்சரா ரெட்டி, பிரவீன் மீது மான நஷ்ட வழக்கினை தொடர்ந்தார்.
தன்னை பற்றி வதந்திகளை பரப்பி கொண்டிருக்கும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், தன்னை பற்றி வெளியிடப்பட்ட 10 வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார் திமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிட முடியாது எனக் கூறி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்சரா ரெட்டி தரப்பில், வழக்கு தொடர்ந்ததும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு தெரியும் எனக் கூறி, அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து ஜோ மைக்கேல் பிரவீனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications