பிறப்பு சான்றிதழ் முதல் நிதியுதவி வரை! தமிழக அரசு வழங்கும் முக்கியமான இலவச சேவைகள் - மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு பயனுள்ள பல சான்றிதழ்கள் எவ்வித கட்டணமுமின்றி அல்லது மிகக் குறைந்த சேவைக்கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் அடிப்படையாகத் திகழும் முக்கியச் சான்றிதழ்கள் சாமானிய மக்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் சான்றிதழ்கள் எவை, அவை எதற்காகப் பயன்படுகின்றன என்பது குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்..!!
வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை மிக முக்கியமானவை. ஒரு மாணவர் கல்வி உதவித்தொகை பெறவோ அல்லது அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறவோ சாதிச் சான்றிதழ் அவசியமாகிறது.

வருமானச் சான்றிதழ்
அதேபோல் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் வருமானச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசின் நிதி உதவிகளையும், வங்கிக் கடன்களையும் எளிதாகப் பெற முடியும். நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் இருப்பிடச் சான்றிதழ், உள்ளூர் வேலைவாய்ப்புகள் மற்றும் இருப்பிட ரீதியான முன்னுரிமை பெற உதவுகிறது. விண்ணப்பிப்பதற்கு ரேஷன் கார்டு, முகவரி சான்று மற்றும் அடையாள சான்றாக உள்ளிட்ட ஆவணங்கள் பொதுவாகத் தேவைப்படும்..
அடிப்படை ஆவணங்களான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் நிகழ்வு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அரசு தரும் இலவச சான்றிதழ்கள்
ஒரு குழந்தையின் பள்ளிச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் விண்ணப்பம் வரை பிறப்புச் சான்றிதழ் ஒருவரது அடிப்படை ஆதாரமாக உள்ளது. அதேபோல், ஒருவரது மறைவிற்குப் பிறகு வாரிசுரிமைச் சான்றிதழ் பெறவும், சொத்து மாற்றங்களுக்கும் இறப்புச் சான்றிதழ் அவசியமான ஆவணமாகிறது. இவை விண்ணப்பித்த சில நாட்களிலேயே கிடைத்துவிடும். ஆனால் வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ் பெற சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்..
உயர் கல்வியில் அரசு வழங்கும் சலுகைகளைப் பெற தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மூலம் வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பேருதவியாக இருக்கிறது.
நிதியதவி, இடஒதுக்கீடு
ஒரு குடும்பத்தில் முதல் முறையாகப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சான்று, கல்விக் கட்டணத்தில் பெரும் தள்ளுபடி கிடைக்க வழிவகுக்கிறது. மேலும், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்க வழங்கப்படும் பி.எஸ்.டி.எம் (PSTM) சான்றிதழை அந்தந்தப் பள்ளி அல்லது கல்வி நிறுவனங்கள் வாயிலாக விண்ணப்பித்துக் கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ளலாம்..
பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்காகச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் சில பிரத்யேகச் சான்றிதழ்கள் உள்ளன. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு மற்றும் மாதாந்திர நிதியுதவி வழங்கப்படுகிறது.
இ-சேவை கட்டணம்
அதுபோலவே, மாற்றுத்திறனாளிகளுக்கென வழங்கப்படும் தனித்துவமான சான்றிதழ் அவர்களுக்குரிய உபகரணங்கள் மற்றும் ஓய்வூதியம் பெற அடிப்படையாக அமைகிறது. இந்தச் சான்றிதழ்கள் அனைத்தையும் உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது டிஎன் இ-சேவை (TN e-Sevai) இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்..
அரசு வழங்கும் இந்தச் சான்றிதழ்கள் சிலவற்றிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லையென்றாலும், இ-சேவை மையங்களில் சேவைக்கட்டணமாக 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம். விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு வழங்கப்படும் விண்ணப்ப எண்ணை கொண்டு ஆன்லைனிலேயே அதன் ஸ்டேட்டஸ் என்னவென்பதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளலாம்.
தகுதியான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எவ்வித இடைத்தரகர்களுமின்றி இந்தச் சேவைகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications