சிறுத்தை சிவா தம்பி நடிகர் பாலா கைது.. முன்னாள் மனைவி கொடுத்த டார்ச்சர் புகாரில் நடவடிக்கை
கொச்சி: இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவருடைய முன்னாள் மனைவி அளித்த புகாரின் பேரில் கடவந்திரா போலீஸார் கைது செய்தனர்.
அன்பு, காதல் கிசு கிசு, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இவர் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். பாலா, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாலாவும் அமிர்தாவும் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து பாலா கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பாலா அண்மையில் சில சேனல்களுக்கு அளித்த பேட்டியில் மகள் அவந்திகா குறித்து நிறைய விஷயங்களை தெரிவித்து வருகிறார். அதில் தனது மகள் மீது தனக்கு பாசம் அதிகம் என்றும் அவருக்கு நிறைய பரிசுகளை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை பாலாவின் மகள் அவந்திகா மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , அவர் (பாலா) சொல்வதில் உண்மை இல்லை. அவரை நேசிக்க எனக்கு சின்ன காரணம் கூட கிடையாது. அவரை நினைத்தாலே அவர் குடித்துவிட்டு என்னையும் என் அம்மாவையும் அடித்ததுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
நான் குழந்தையாக இருந்ததால் எனது அம்மாவை அவர் அடித்த போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மீது அவருக்கு உண்மையிலேயே பாசம் இருந்தால் எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த பாலா, என்னை அப்பா என அழைத்ததற்கு நன்றி. நான் உன்னுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. உனக்கு 3 வயதாக இருந்த போது நான் உன் மீது பாட்டிலால் அடிக்க முயன்றதாகவும் 5 நாட்கள் வரை உன்னை பட்டினி போட்டதாகவும் சொல்லியிருக்கிறாய்.
ஆனால் உன்னுடன் வாக்குவாதம் செய்து இது உண்மையில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. நீயே ஜெயித்து விட்டு போ! இனி உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா அளித்த புகாரில் பாலா என்னையும் என் மகளையும் வழிமறித்து டார்ச்சர் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். அவரது புகாரை வைத்து எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பாலாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அப்போது ஒரு வீடியோவில் பேசிய பாலா, விரைவில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள போகிறேன். சிகிச்சை முடிந்து நான் பிழைக்காமலும் போகலாம். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் மருத்துவரான என் மனைவி எலிசபெத், என்னை போன்ற நடிகரை திருமணம் செய்து கொள்ளாமல் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு தானம் கொடுக்கப்பட்ட கல்லீரலை வைத்து அறுவை சிகிச்சை முடிந்தது. இதையடுத்து அவர் மெல்ல மெல்ல நலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications