அங்கமாலி டைரீஸ் புகழ் நடிகர் சரத் சந்திரன் இறப்பு ஏன்?.. தற்கொலை கடிதத்தால் சூடு பிடிக்கும் விசாரணை
கொச்சி: பிரபல மலையாள நடிகரான சரத் சந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அவரது அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சி வைட்டிலாவை சேர்ந்தவர் 37 வயதான சரத் சந்திரன். முதுகலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்தவர். அதாவது எம்சிஏ படித்திருந்தார். இவர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார்.
இதையடுத்து டப்பிங் துறையில் சரத் சந்திரன் முதல் முறையாக அடியெடுத்து வைத்தார். பின்னர் அனீஸ்யா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து கூடே, காம்ரேட் இன் அமெரிக்கா, ஒரு மெக்சிகன் அபராதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விளம்பர படங்கள்
அது போல் சில விளம்பர படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் அங்கமாலி டைரீஸ் எனும் படத்தில் கல்லூரி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவராக நடித்து பிரபலமானார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தந்தை சந்திரன், தாய் லீலா, இளைய சகோதரர் ஷியாம் சந்திரன் ஆகியோருடன் காக்காட் பகுதியில் குடிபெயர்ந்தார்.
மர்மமான முறையில் மரணம்
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடலை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அறையில் ஒரு தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை என சரத் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மன உளைச்சல்
மேலும் அந்த கடிதத்தின் மூலம் அவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அவரது பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது இறப்பு குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
தற்கொலை
மலையாள திரையுலகில் இளம் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வதால் அதிர்ச்சி எழுந்துள்ளது. தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. எனவே தற்கொலை எண்ணம் வந்தால் மாநில ஹெல்ப்லைனை அணுகவும் என அவ்வப்போது விளம்பரம் செய்யப்படுகிறது.