தமிழ்நாடு டூ இலங்கைக்கு அதிவேக சொகுசு கப்பல் சேவை- குமுறும் 'லட்சத்தீவுகள்'.. காரணம் என்னவாம்?
கொச்சி: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்ட உடனேயே கேரளாவின் லட்சத்தீவுகளில் இருந்து குமுறல்கள் வெடித்து கிளம்பி உள்ளன.
தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கையின் வடபகுதி (ஈழம்) தமிழர்களுக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினை என தொப்புள் கொடி உறவுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தன. கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இந்த உறவு நிலையில் பெரும் தாக்கத்தை தலைகீழ் மாற்றத்தை உருவாக்கிவிட்டது.

கச்சத்தீவு: கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா என்பதே இருதரப்பு உறவுகளும் ஒன்று கூடி பெண் பார்த்தல் உள்ளிட்ட உறவு சார் நிகழ்வுகளுக்கானது என்கிறது தொடக்க காலம். இப்போது கச்சத்தீவு அந்தோணியார் கோவில் பக்கம் கால் வைத்தாலே காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்கிறது சிங்கள கடற்படை.
தமிழ்நாடு- இலங்கை கப்பல் போக்குவரத்து: இந்த பின்னணியில் தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடபகுதி தமிழர் நிலத்துக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் முயற்சிகள் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து முயற்சிகள் சில பல காரணங்களால் வெற்றிகரமாக அமையவில்லை. நாகப்பட்டினம், இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் இடையே 2 நாட்களுக்கு முன்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சிரியா பாணி அல்லது செரியாபாணி என்கிற 150 பேருடன் பயணிக்கும் அதிவேக பயணிகள் கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியது. தமிழ்நாடு- இலங்கை இடையேயான பயண நேரம் 3.30 மணிநேரம்தான். ஆனால் 2-வது நாளாக இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. போதுமான பயணிகள் முன்பதிவு செய்யாத நிலையில் வாரம் 3 நாட்கள் மட்டும் இயக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு- கொச்சி: இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்குள்ளேயே பயணிகள் கப்பல் போக்குவரத்து அவசியத் தேவையாக இருக்கக் கூடிய பகுதிக்கு இத்தகைய அதிவேக பயணிகள் கப்பல் அதிக அளவில் இயக்கப்படவில்லையே என்கிற குமுறல் வெளிப்படுகிறது. நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத் தீவுகள். அரபிக் கடலில் பல்வேறு தீவு கூட்டங்களின் ஒருங்கிணைப்பாக லட்சத் தீவுகள் இருக்கின்றன. லட்சத் தீவுகளை இந்தியாவின் தரைநிலப் பகுதிகளுடன் இணைப்பதற்கான பிரதான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து. மற்றொன்று விமானப் போக்குவரத்து. கொச்சியையும் லட்சத்தீவுகளையும் இணைக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் 4 கப்பல் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவை 300 முதல் 400 வரை பேர் பயணிக்கக் கூடியவை. லட்சத்தீவு மக்கள் அன்றாடம் மெயின் நிலத்துக்கு வந்து செல்ல பல மணிநேரம் இந்த கப்பலில் பயணித்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.
லட்சத்தீவுகளில் குமுறல் ஏன்?: இந்த நிலையில்தான் தமிழ்நாடு- இலங்கை இடையேயான அதிவேக கப்பல் போக்குவரத்து சேவை லட்சத்தீவு மக்களையும் பெருமூச்சுவிட வைத்துள்ளது. இத்தகைய அதிவேக பயணிகள் கப்பல் சேவைகளை லட்சத்தீவு மற்றும் கொச்சி இடையே இயக்க வேண்டும் என்பது தங்களது நீண்டகால கோரிக்கை. இதனடிப்படையில் செரியாபாணி அல்லது சிரியா பாணி உட்பட 3 கப்பல்கள் இயக்கப்பட்டன. இதில் ஒன்றைத்தான் தமிழ்நாடு- இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தங்களுக்கு பெரும் ஏமாற்றம் என்கின்றனர் லட்சத்தீவு மக்கள். அன்றாட வாழ்க்கை பயணத்துக்கான அதிவேக கப்பல்களை கூடுதலாக இயக்குவதுதான் தங்களது குமுறல்களுக்கு தீர்வு என்பது லட்சத்தீவு மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications