வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்.. தந்தை கண்முன் உயிரிழந்த 15 வயது சிறுவன்.. என்ன நடந்தது?
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிய போது தந்தை கண்முன்னே 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3வது மலையில் மயங்கி விழுந்த சிறுவனை உடனடியாக டோலி மூலமாக கீழே கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. பூண்டி கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7வது மலை ஏறி சென்றால், சுயம்புலிங்க சாமியான சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த ஏழு மலைகளை கடந்து செல்ல நடந்தே செல்ல வேண்டும்.

இந்த சுயம்புலிங்க சாமியை தரிசிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். நடப்பாண்டில் பிப்.1 முதல் பக்தர்கள் பலரும் தரிசனம் மேற்கொண்டு வந்தனர். சிவபெருமானை தரிசனம் செய்ய முடிவதோடு, நல்ல மலையேற்ற பயிற்சியாகவும் இருக்கும் என்பதால், இளைஞர்கள் பலரும் வெள்ளியங்கிரி செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க மலையேறினர். அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் விஷ்வா தனது தந்தை முருகனுடன் மலையேறி தரிசனம் செய்துள்ளார். 7 மலைகள் ஏறி தரிசனம் மேற்கொண்ட விஷ்யா, பின்னர் மீண்டும் மலையில் இருந்து கீழே இறங்கி இருக்கிறார்.
அப்போது 3வது மலையை எட்டிய போது விஷ்வா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதன்பின் உடனடியாக டோலி மூலமாக விஷ்யா அடிவாரம் கொண்டு வரப்பட்டு சோதனை செய்த போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையில் இருந்து இறங்கிய போது தந்தை கண் முன்பாகவே சிறுவன் உயிரிழந்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வெள்ளியங்கிரி மலையேறச் செல்பவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயதிற்கு மேலானவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டாம் என்று அடிவாரத்திலேயே அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் உடலில் பிரச்சனைகள் இருப்பவர்கள் மலையேற வேண்டாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் ஈடுபடுவோர் உயிரிழப்பது வழக்கமாகி வருகிறது. கடந்த மாதம் 19 வயது இளைஞர் மலையேற்றத்தின் போது உயிரிழந்தார். கடந்த சில மாதங்களில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications