கோவை உக்கடத்தில் பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. ஒரே நாளில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட 22 வீடுகள்
கோவை: கோவை உக்கடத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வர சித்தி விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை சுற்றி, கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஏராளமாக உள்ளது. இங்கு ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி வசித்து வந்தார்கள். அப்படி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதனால் ரூ.20 கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டது.
கோவில் நிலங்களை பொறுத்தவரை யார் மலிவாக தந்தாலும் வாங்கி கொள்ளக்கூடாது. ஏனெனில் திடீரென ஒரு நாள் பெரிய சிக்கல் வரும். பலர் வீடுகள் கட்டி வசித்தாலும் ஒரே நாளில் இடித்து அகற்றப்படும். மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.. சென்னையில் இப்படியான சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. கோவையிலும் நேற்று நடந்துள்ளது.

கோவை உக்கடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வர சித்தி விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்கள். பல ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளை காலி செய்யக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள்.
இதனை எதிர்த்து குடியிருப்பவர்கள் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இதுகுறித்த மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற அறிவுறுத்தினர்.தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் மூலம் அந்த வீடுகளை இடிக்க சென்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் வீடுகளை இடிக்கும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பொருட்களை வாகனங்களில் ஏற்றினர். பொதுமக்கள் வீடுகளை காலி செய்ததும் அந்த வீடுகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, உக்கடம் வர சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து 22 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது வந்தது. மேலும் ஒரு சில கடைகளும் இயங்கின. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.20 கோடி என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications