மாதம் 1000 ரூபாய்.. கோவையில் புதுமைப்பெண் திட்டத்தில்.. பயன்பெற போவது இவ்வளவு பேரா?
கோவை: கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் இந்த ஆண்டு மாதம் ரூ.1000 பெற 4,750 மாணவிகள் தகுதி பெற்றுள்ளதாக சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து முடித்தபின், உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. மாணவிகள் உயர் கல்வி கற்பதற்கும் ஊக்கம் அளிக்கும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அதிக அளவில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை விகிதமும் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த திட்டத்தின் படி, கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ITI, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும்.
தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக ரூ. யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் செயல்படுத்தும் இந்த திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் இந்த திட்டம் குறித்து மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகையில், "புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் இதுவரை கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர் கடந்த ஆண்டு இந்த திட்டத்தில் 6,205 பேர் தகுதி பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு இதுவரை 4,750 மாணவிகள் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். அரசு நிதி உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் 274 மாணவிகள் இந்த ஆண்டு பயன் பெறுகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு வந்து பலர் உயர் கல்வியை தொடங்குவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் இதுவரை மாணவிகள் உயர் கல்வியில் சேரும் சதவிகிதம் அதிகரித்துள்ளது" இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
உதவித்தொகை கிடைக்கவேண்டும் மற்றும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை உதவும் என்பதை தாண்டி, புதுமைப் பெண் திட்டத்தினை உண்மையில் அரசு கொண்டு வந்ததன் காரணம் என்ன தெரியுமா? உண்மையான காரணம், பெண் குழந்தைகள் கல்வியில் இடையில் நிற்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
அதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் பதின்ம வயதில் திருமணம் செய்து வைப்பது நடக்கிறது.. அதை தடுக்கவே இந்த திட்டம்செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பல்வேறு திறமைகள் உள்ளன.
அந்த திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறவும் உயர்கல்வி பயின்றால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் எந்த சவாலையும் சமாளிக்க முடியம் என்பதால், அரசு இந்த புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் உதவி தொகையை பெற https://www.pudhumaipenn.tn.gov.in/linstitution.php என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications