கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி
Recommended Video
கோவை: கோவையில் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகிவிட்டனர்.
தமிழகம், புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை கொட்டி வருகிறது. இது கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இருதினங்களாக நாகை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இன்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 பேர்
மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்தனர்.
இரு குழந்தைகள்
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 17 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
17 பேர் பலி
அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக மழை
கோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரங்களில் அதிக மழையும் பெய்து வருகிறது. அதிலும் நேற்று மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உறவினர் வீட்டில்
இடிந்து விழுந்த 4 வீடுகளில் மொத்தம் 10 பேர் மட்டுமே இருந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியில் கனமழை பெய்ததால் அங்கிருந்த சிலர் இந்த 4 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உறவினர்கள் என்பதால் அவர்களும் அந்த வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் யார்
சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களில் அடையாளம் தெரிந்தது. அவர்கள் குரு (45), அரிசுதா (16), ராம்நாதன்(20), அட்சயா(7), லோகுராம்(7), ஓவியம்மாள்(50), நதியா(30), சிவகாமி(50), நிவேதா(20), வைதேகி(22), ஆனந்தகுமார்(46), திலாகவதி(50), அருக்கணி(55), ருக்குமணி(40), சின்னமாள்(70) உள்பட 17 பேர் பலியாகினர். 17 பேருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.