கோவை மக்களின் குரல் கேட்டிருச்சு.. மதுக்கரையில் நிறைவேறும் பல நாள் கனவு.. போக்குவரத்து மாற்றம்
கோவை: கோவை-பாலக்காடு நெடுஞ்சாலை, மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில் சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது. பல ஆண்டுகளாக நெரிசலில் தவித்த கோவை மக்களுக்கு விடிவு பிறக்க போகிறது. கோவை மரப்பாலம் ரயில்வே சுரங்கப்பாதை விரிவாக்கப்பணி தொடங்கப்பட உள்ளது. இதனால் கோவை- பாலக்காடு சாலையில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கோவையில் மதுக்கரை என்பது பாலக்காடு சாலையில் உள்ள முக்கியமான பகுதியாகும். கோவை-பாலக்காடு நெடுஞ்சாலை மதுக்கரை மரப்பாலத்தில் ரயில் சுரங்கப்பாதை உள்ளது.இந்த பாதை ஒரு வழிப்பாதையாக இருந்து வருகிறது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.

இதனால் மதுக்கரை சுரங்கப்பாதையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது நடக்கிறது.. இதன் காரணமாக சுரங்கப்பாதையை அகலப்படுத்தி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மதுக்கரை பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் பாலத்தை அகலப்படுத்தும் பணி நடக்கவே இல்லை..
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஒருவழியாக மக்களின் குரல் அரசுக்கு கேட்டுவிட்டது. மக்களின் கோரிக்கையை ஏற்று மதுக்கரை மரப்பாலம் சுரங்கப்பாதை விரிவாக்கம் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்க உள்ளார்கள். ரயில்வே நிர்வாகம் 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்தில் பாதை பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக கோவை- பாலக்காடு சாலையில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி கோவையிலிருந்து மரப்பாலம் வழியாக பாலக்காடு செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, குவாரி அலுவலக சாலை, குரும்பபாளையம் சாலை மற்றும் மதுக்கரை சந்தை சாலை வழியாகச் சென்று செட்டிபாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும்.
பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் வாகனங்கள் செட்டிபாளையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வீரகுக்கடை பாலம் மற்றும் ஏ.சி.சி. சிமென்ட் தொழிற்சாலை சாலை வழியாக எதிர் திசையில் செல்ல வேண்டும்.
நகரத்திலிருந்து பாலக்காடு செல்லும் லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் சந்திப்பு, குறிச்சி மற்றும் ஈச்சனாரி சாலை வழியாக சேலம்-கொச்சி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். பாலக்காடு-கோவைதிசையில் செல்லும்போது இந்த வாகனங்கள் அதே பாதையில் செல்ல வேண்டும்.
ஆத்துப்பாலம் மற்றும் சுந்தராபுரம் சந்திப்புகளிலிருந்து பாலக்காடு சாலை நோக்கிச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் குறிச்சி- கண்ணமநாயக்கனூர் சாலை வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் நுழைய வேண்டும். பாலக்காடு சாலையிலிருந்து நகரத்தை அடைய, இந்த பஸ்கள்அதே பாதையில் செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு பஸ்கள் குறிச்சி- கண்ணமநாயக்கனூர் சாலை, மதுக்கரை மார்க்கெட் சாலை மற்றும் செட்டிபாளையம் சந்திப்பு வழியாக சேலம்-கொச்சி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். பாலக்காட்டில் இருந்து கோவைக்கு செல்லும் பஸ்கள் அதே வழித்தடத்தில் செல்ல வேண்டும்" இவ்வாறு அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications