அடி உதை… கோவையில் விசிக நிர்வாகி மீது புகாரளித்து தற்கொலைக்கு முயன்ற அஞ்சல் ஊழியர்!
கோவை: கோவையில் இடத் தகராறு காரணமாக மகள்களை ஆபாசமாகப் பேசி, தன்னை அடித்து உதைத்த விசிக நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அஞ்சல் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ், அங்குள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜுக்கும் இடப்பிரச்சனை எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இடப்பிரச்சினை தொடர்பாக ஜார்ஜ் குப்புசாமி அடிக்கடி அற்புதராஜுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆபாசமாக பேசி தாக்கியுள்ளதாக அற்புதராஜ் கூறியுள்ளார்..மேலும், அற்புதராஜின் 2 மகள்கள் மற்றும் மகனை விசிக நிர்வாகி ஆபாசமாகப் பேசியதோடு, தாக்கியதாகவும், அற்புதராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 15ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அற்புதராஜ் மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசிக நிர்வாகி மீது புகாரளித்து அஞ்சல் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications