கோவை அருகே கோர விபத்து.. ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி!
கோவை: கோவை அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் காரில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பிரிவு அருகே சூலூர் என்ற இடத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரும் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 5ஆக அதிகரித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.