பீப் கறியுடன் வந்த ஆதிதமிழர் கட்சி.. போராட்டத்துக்கு தயாராகும் பாஜக
கோவை: கோவை கணபதி அருகே தம்பதி பீப் கடை வைத்ததற்கு பாஜக பிரமுகர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீசி போராட்டம் நடத்த முயன்ற ஆதி தமிழர் கட்சியினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதி அருகே உள்ள உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தன் மனைவி ஆபிதாவுடன் இணைந்து அங்கு சாலையோரம் தள்ளு வண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி, பீப் சுக்கா உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். அதே பகுதியில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் என்பவர் உள்ளார்.

சுப்பிரமணியம் அவர்களின் கடைக்கு சென்று, இங்கு பீப் எல்லாம் போடக்கூடாது. கடையை மாற்றுங்கள் என்று மிரட்டல் தொனியில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரவி - ஆபிதாவுக்கு பெரியாரிய மற்றும் தலித் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதுகுறித்து சுப்பிரமணியம் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.
ரவி - ஆபிதா தம்பதி, எங்களுக்கு தெரிந்த தொழிலைத்தானே நாங்கள் செய்ய முடியும். பீப் என்றால் அவ்வளவு கேவலம் ஆகிவிட்டதா. அவர்கள் கூறியதால் ஏற்கனவே கடையை மாற்றிவிட்டோம். ஆனாலும் மீண்டும் மீண்டும் மிரட்டுகிறார். இதனால் பலரும் கடைக்கு வருவதற்கே தயங்குகிறார்கள். பல ஆயிரம் ரூபாய் நஷ்டமடைந்துவிட்டது. என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ரவி - ஆபிதா தம்பதியை மிரட்டிய குற்றத்துக்காக பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர் மீது துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் பகுதியில் உள்ள பாஜக பொது மக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டு கண்டனம் தெரிவித்தனர்.
ஊர் கட்டுப்பாடு என்பதால் பீப் கடை போடக்கூடாது என்றோம். இது ஊர் தலைவர்கள், மக்கள் இணைந்து எடுத்த முடிவு. கோயில் அருகே பீப் கடை போட்டதை பற்றி கேட்டதற்கு குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாக பரப்புகிறார்கள். என்று சுப்பிரமணியம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் சுப்பிரமணியம் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று முற்போக்கு அமைப்புகள் குற்ற சாட்டின. இதையடுத்து பாஜக பிரமுகர் சுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் கோவை பாஜக அலுவலகம் மீது பீப் கறி வீசி எதிர்ப்பு தெரிவிக்க போவதாக அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சித்தாபுதூர் விகேகே மேனன் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியினர் பீப் கறியுடன் வந்தனர். ஆதி தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சத்யன் என்பவர் தலைமையில், பீப் கறி வந்த ஆதி தமிழர் கட்சியினரை பாஜக அலுவலகத்துக்கு 100 மீட்டர் முன்னதாகவே காவல் துறையினர் முன்னெச்சரிக்கைகாக தடுத்து விட்டனர்.
அப்போது அவர்கள் பீப் கறியை சாலையில் வீசி எறிந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைபடங்களை காலில் போட்டு மிதித்து முழக்கம் எழுப்பினா். சாலையில் படுத்து கொண்டும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிசென்று கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த தகவலை அறிந்த மாவட்ட பாஜக பிரமுகர்களும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இது பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காவிடின் கோவையில் பாஜகவினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications